காத்தான்குடியில் நிர்மாணிக்கப்படும் பாடசாலைகளுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தின் பெயர்



காத்தான்குடியில் நிர்மாணிக்கப்படும் புதிய பாடசாலைகளுக்கு ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஆசுமாரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கல்வி சம்பந்தமான மேற்பார்வை குழுவின் பரிசோதனைகளின் மூலம் இது தெரியவந்துள்ளதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.


நாடாளுமன்றில் நேற்று  (வெள்ளிக்கிழமை) அவசரகாலச் சட்டத்தை நீடிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று கல்வி வலயங்கள் இருக்கின்றன என தெரிவித்த அவர், அவற்றில் காத்தான்குடி கல்வி வயத்தில் புதிதாக 5 பாடசாலைகள் உட்பட மொத்தம் 8 பாடசாலைகள் நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.

அத்துடன், அந்த பாடசாலைகள் அனைத்துக்கும் ஹிஸ்புல்லாஹ்வின் குடும்பத்தின் பெயர்களே சூட்டப்பட்டுள்ளதாகவும் குறித்த பாடசாலைகளை நிர்மாணிப்பதற்கான நிதியும் சட்டவிரோதமாகவே கொண்டுவரப்பட்டிருக்கின்றது என்பது நாடாளுமன்ற கல்வி சம்பந்தமான மேற்பார்வை குழுவின் பரிசோதனைகளில் தெரியவந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.