காத்தான்குடியில் இராணுவ முகாம் அமைக்க திட்டம்!


தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளால் பயன்படுத்தபட்டு வந்த காணிகளில் இராணுவ முகாம்களை அமைப்போம் என இராணுவத் தளபதி லெப்.மகேஸ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்தோடு காத்தான்குடியில் அமைந்துள்ள தௌஹீத் ஜமாத் அமைப்பிற்கு சொந்தமானதெனக் கூறப்படும் முகாமில் மனோநிலையை மாற்றும் மனோதத்துவ ரீதியிலான பயிற்சிகளே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், “காத்தான்குடியில் பல ஏக்கர் காணியில் பயிற்சி முகாம்கள் இருப்பது தொடர்பான கருத்துக்களை நான் ஏற்க மறுக்கின்றேன். இங்கு தவறான புரிதலொன்று ஏற்பட்டிருக்கின்றது. இது இராணுவத்தினரினதோ அல்லது விடுதலைப் புலிகளுடையதைப் போன்றதொரு பயிற்சி முகாம்கள் அல்ல.

ஊடகங்களில் அவற்றின் ஒளிப்படங்களைப் பார்த்தேன். அது ஒரு சிறிய காணி. அங்கு யுத்தப் பயிற்சிகள் இடம்பெற்றிருக்கவில்லை. மாறாக மனோநிலையை மாற்றும் மனோதத்துவ ரீதியிலான பயிற்சிகளே மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இவை முஸ்லிம்கள் வசிக்கும் பிரதேசங்களிலேயே இடம்பெற்றுள்ளன. அப்பிரதேசங்களில் தற்போது இராணுவ முகாம்கள் எதுவும் இல்லை.

கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம்கள் இராணுவத்தினருடன் சகோதரர்களைப் போன்றே பழகுகின்றனர். எனினும் சில அடிப்படைவாதிகள் அவர்கள் கண்களைக்கட்டிவிட்டு இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலை மீண்டும் உருவாகாதிருக்க அங்கும் இராணுவ முகாம்களை அமைப்போம். அதற்காக தற்போது அரசுடைமையாக்கப்பட்டுள்ள பயங்கரவாதிகளால் பயன்படுத்தப்பட்டு வந்த காணிகளில் முகாம்களை அமைப்போம்” என குறிப்பிட்டுள்ளார்.