சர்வதேச தாதியர் தினம் (International Nurse Day)



சர்வதேச செவிலியர் தினம் 
International Nurse Day
May 12
ஒரு குழந்தை பிறந்தவுடன் கருவில் சுமந்த தாயை பார்க்கும் முன் காணும் தாய் முகம் உங்களுடையதே
தாதியர் சேவையின் தாயான ஃப்ளோரன்ஸ் நைடிங்கேலின் பிறந்த தினம் சர்வதேச தாதியர் தினமாக ஒவ்வாரு வருடமும் மே 12 ம் திகதி நினைவுகூரப்படுகிறது .

எத்தனை சர்ச்சைகள் வந்தாலும் தாதியர் என்பது எப்போதும் புனிதமான ஒரு தொழில்தான். உயிர் காக்கும் மருத்துவர்கள், தாதியர்கள் எல்லோரும் நன்றிக்குரிய கடவுளர்தான். இது உணர்ச்சிவசத்தால் மட்டுமே சொல்லப்படுகிற வார்த்தைகள் அல்ல, அதற்கு நியாயமான சில காரணங்களும் உண்டு.
ஏனெனில்.....
ஒருவர் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்படும்போது அதன் தாக்கத்துக்கு தாதியர்களும் சிறிது ஆட்படுகிறார்கள் என்பதே உண்மை. காயங்களுக்கு மருந்திடும்போதும், கட்டு போடும்போதும் பல தாதியர்கள் அதனை மிகப்பெரிய தியாகமாகவே செய்கிறார்கள். குறிப்பாக Diabetic foot ulcer போன்ற துர்நாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய பிரச்னைகளுக்குக் கட்டுபோடும்போது, அந்த அசாதாரணமான உணர்விலிருந்து மீள முடியாமல் பல தாதியர்கள் அன்று சரியாகவே உணவு உட்கொள்வதில்லை.

ஒவ்வொரு பிரசவத்தை எதிர்கொள்ளும் போதும் அன்றைய இரவு நேரத்தில் தாதியர் ஒவ்வொருவரும் குறைந்தது அன்று 10 பேருக்காவது பதிலளிக்கக் கடமைப்பட்டவராயிருக்கிறார்கள். அறுவைச் சிகிச்சைகள் பலவும் மணிக்கணக்காக நிகழ்கின்றன. உதாரணமாக நரம்பியல் மருத்துவர்கள் 12 மணி நேரம் தொடர்ச்சியாக அறுவை சிகிச்சை செய்கிறார்கள். அந்த மிக முக்கியமான கட்டத்தினால் தாதியர்களும் தங்களது தூக்கம் மற்றும் உணவையே மறக்கிறார்கள். ஒரு இதய சிகிச்சை நோயாளியை மருத்துவர் பரிசோதிக்கும்போது, ஆய்வகத்தின் கதிர்வீச்சுக்கு அவர்களும் சிறிது ஆளாகிறார்கள்.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, வேலை தொடர்பான அழுத்தம், போதிய உறக்கமின்மை, நேரம் தவறி உண்பது போன்ற காரணங்களால் சராசரி மனிதர்களின் வாழ்நாளைவிடவும் ஒரு தாதியரின் வாழ்நாள் சில வருடங்கள் குறைவு.
ஆம்... மருத்துவர்களும், தாதியர்களும் பணத்துக்காகத்தான் வேலை செய்கிறார்கள். ஆனால், பணம் ஒன்றுக்காக மட்டுமே வேலை செய்வதில்லை அவர்கள்.

தாதியர் பணியில் இருக்கும் அனைவருக்கும் சர்வதேச தாதியர் தின வாழ்த்துக்கள்.

(sanjjaiy)