பாராளுமன்றம் முற்றுகையிடப்படும்-விமல் வீரவன்ச எம்பி



அமைச்சர் ரிஷார்ட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணையை இன்னும் இரு வாரங்களுக்குள் விவாதத்திற்கு எடுக்க சபாநாயகர் நடவடிக்கை எடுக்காவிட்டால் பாராளுமன்றம் மக்களால் முற்றுகையிடப்படுமென விமல் வீரவன்ச எம்பி இன்று சபையில் எச்சரித்தார்.

அவர் இங்கு பேசும் போது மேலும் கூறியதாவது,

தன்னை சிறந்த பௌத்தர் என்று கூறிக்கொள்ளும் சபாநாயகர் ரிஷார்ட் விடயத்தில் என்ன நடவடிக்கை எடுக்கிறார் என்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

பாராளுமன்ற தெரிவுக்குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதால் அது சபைக்கு வரும் வரை இந்த நம்பிக்கையில்லா பிரேரணை எடுக்கப்படக் கூடாதென இன்று கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.இது ஏற்றுக்கொள்ள முடியாதது.

எங்களுக்கு விரைவில் ஒரு திகதி கிடைக்காவிட்டால் மக்களை கொண்டு பாராளுமன்றத்தை முற்றுகையிடுவோம்.

இங்கே உள்ள அமெரிக்கத் தூதுவர் இங்கு வர முன்னர் ரீயுனிசியா , சிரியாவில் பணி புரிந்தவர்.ஒரு நாட்டில் குழப்பங்கள் இருந்தால் தான் அமெரிக்காவின் தலையீடு நடக்கும்.அவர்கள் வர அதுவே வசதி. இப்போது விகாரைகளுக்கு செல்லும் அமெரிக்க தூதுவர் தனது பணியை இங்கு செவ்வனே செய்ய ஆரம்பித்துள்ளார்.

இன்று ஆளுங்கட்சி கூட்டத்தில் அமைச்சர் ரிஷார்ட் தான் பதவி இராஜினாமா செய்தால் அரசு கவிழ்ந்து விடுமென அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார். அரசு ஏற்கனவே கவிழ்ந்து போய் தான் உள்ளது என குறிப்பிட்டார் .