Batticaloa Campus க்கு சொந்தமான வங்கிக்கணக்கு குறித்த தகவல்களை வழங்குமாறு அறிவிப்பு



‘Batticaloa Campus’ நிறுவனத்துக்கு சொந்தமான வங்கிக் கணக்கு தொடர்பிலான அனைத்துத் தகவல்களையும் வழங்குமாறு, கடந்த 4 வருடங்களில் அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பில் விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு, இலங்கை வங்கிக்கு அறிவித்துள்ளது.

குறித்த நிறுவனத்துக்கு வௌிநாடுகளில் இருந்து கிடைக்கப்பெற்றுள்ள நிதி தொடர்பிலான விசாரணைகளின் பொருட்டு இந்த தகவல்கள் கோரப்பட்டுள்ளன.

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் ‘Batticaloa Campus’ நிறுவனத்தின் வங்கி கொடுக்கல் வாங்கல்கள் உள்ளிட்ட அறிக்கையை எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வழங்குமாறு இலங்கை வங்கியின் நடவடிக்கைப் பிரிவு முகாமையாளருக்கு அறிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, ‘Batticaloa Campus’ நிறுவனத்தின் நடவடிக்கைகள் தொடர்பில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் M.L.A.M. ஹிஸ்புல்லா, ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சாட்சி வழங்கியுள்ளதுடன், நிறுவனத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களிடமும் சாட்சியங்களைப் பதிவுசெய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.