மின்சார சபை இலாபமடைய வேண்டுமானால் உலகை வெற்றி கொள்ள வேண்டும்


அதிக செலவை ஏற்படுத்தும் மின்னுற்பத்தி நிலையங்கள் ஒன்றரை வருடத்தில் முழுமையாக நிறுத்தப்படுமென மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

அதேபோல், மேலும் சில மாதங்களில் இலங்கை மின்சார சபை வெளிநாடுகளிலும் ஒப்பந்த அடிப்படையில் வேலைகளை ஆரம்பிக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டார். மின்சார சபை இலாபமடைய வேண்டுமானால் உலகை வெற்றி கொள்ள வேண்டும்.

இதற்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மின்சார சபையிடம் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். எப்போதும் பாவனையாளர்களுக்கு முக்கியத்துவம் அளித்துச் செயற்பட இலங்கை மின்சார சபை மாற்றம் காண வேண்டும்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற வைபவத்தில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
வெசாக் மற்றும் பொசொன் பண்டிகைக் காலத்தில் நாடு இருளில் இருப்பதைக் காண்பதில் மகிழ்ச்சியடைய முயற்சித்த எதிரணிகளின் கனவை சீர்குலைக்க அரசாங்கத்தால் முடிந்திருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

சீஈபி கெயார் கையடக்க தொலைபேசி செயலி அங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் மின்பாவனையாளர்களுக்கு பல வசதிகள் கிடைக்க உள்ளன. கையடக்கத் தொலைபேசி மூலம் இதனை தரவிறக்கம் செய்து பதிவு செய்து கொள்வதன் மூலம் இந்த பயன்களைப் பெற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.