மணலை அகற்றி வேறுஇடத்திற்கு எடுத்துச்செல்வதற்கு முறைப்படியான அனுமதி பெறப்பட்டுள்ளது



-ஏறாவூர் ஏ.எம்.றிகாஸ்-


நன்னீர் மீன் வளர்ப்பு திட்டத்திற்காக தோண்டப்படும் குழியிலிருந்து எடுக்கப்படும் மணலை அகற்றி வேறுஇடத்திற்கு எடுத்துச்செல்வதற்கு முறைப்படியான அனுமதி பெறப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு- கொம்மாதுறை- பலாச்சோலை பிரதேச நன்னீர் மீன் வளர்ப்பாளர் அமைப்பின் தலைவர் சீவீ. மேகநாதன் தெரிவித்தார்.

மீன் வளர்ப்பிற்கான பாரிய தொட்டி அமைப்பதற்காக நிலம் தோண்டப்பட்டு வெளியெடுக்கப்படும் மணலை வேறு இடத்திற்கு எடுத்துச்செல்லாவிட்டால் மீன் வளர்ப்புத் தொட்டி மூடப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பலாச்சோலை பிரதேசத்தில் 19.06.2019 நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இக்கருத்தினைக் கூறினார்.
மட்டக்களப்பு- கொம்மாதுறை- பலாச்சோலை பிரதேசத்தில் மீன் வளர்ப்பிற்கான தொட்டி அமைப்பதற்கான குழியிலிருந்து எடுக்கப்படும் மணல் வேறுஇடத்திற்கு எடுத்துச்செல்லப்படுவதனால் அப்பிரதேசம் மழை காலங்களில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் இருப்பதாகத் தெரிவித்து கடந்த 18.06.2019 செவ்வாய்க்கிழமையன்று ஒரு குழுவினரால் ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து ஏற்பாடு செய்யபட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் திருவாளர் மேகநாதன் விளக்கமளிக்கையில்-- நடைபெற்ற ஆர்ப்பாட்டம் தனிப்பட்ட குரோதம், காழ்ப்புணர்வு மற்றும் அரசியல் பின்னணியைக்கொண்டது. சம்பந்தப்பட்ட பிரதேச மக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் அவர் கூறினார்.

மீன் வளர்ப்புத்திட்ட நடவடிக்கைகள் கடந்த ஒரு வருடகாலமாக மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை தேசிய நீர் உயிரின வளர்ப்பு அபிவிருத்தி அதிகார சபை (நக்டா) புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம், செங்கலடி பிரதேச சபை, பிரதேச செயலகம், மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சு போன்ற நிறுவனங்கள் முறையான அனுமதி வழங்கியுள்ளதுடன் குறித்த பிரதேச மக்கள் இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக கையொப்பமிட்டு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் குழிதோண்டி மீன் வளர்ப்பிற்கான தொட்டி அமைக்கப்பட்டதையடுத்து மீதமுள்ள மணலை வெளியேற்றுவதற்கு பிரதேச மக்கள் எழுத்துமூலம் இணக்கம் தெரிவித்துள்ளதுடன் பிரதேச செயலகம், பிரதேச சபை, மத்திய சுற்றாடல் அதிகார சபை உள்ளிட்ட நிறுவனங்கள் எழுத்துமூல அனுமதியளித்துள்ளன. அத்துடன் மீன் வளர்ப்புத்திட்டம் கைவிடப்படும்போது குழியை மூடுவதற்கான பொறுப்பினை உரிமையாளர் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும் குறித்துக்கூறப்பட்டுள்ளது.

இதேவேளை 27.05.2019 தொடக்கம் 10.07.2019 வரையிலான சுமார் ஒன்றரை மாத காலத்திற்குள் 675 கியூப் மணலை அங்கிருந்து அகற்றுவற்கு புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியகம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றார்.