நாட்டை முன்னேற்ற தீய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்: சம்பிக்க


நாட்டை முன்நோக்கி கொண்டுச் செல்ல வேண்டுமென்றால் தீய செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவர வேண்டியது மிகவும் அவசியமென பாட்டாலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கண்டியில் நேற்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே சம்பிக்க ரணவக்க இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,

‘‘நாட்டை கொள்ளையர்களிடமிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்தினார்கள். ஆனால் மீண்டும் அவர்களது ஆதிக்கம் மேலோங்கி வருகின்றது.

இதேவேளை ஒரு பிரச்சினைக்கு நீதிமன்றத்தின் ஊடாக தீர்வை பெற முயற்சித்தால் பல வருடங்கள் செல்கின்றது. இதனை நீங்களே அறிவீர்கள்.

மேலும் ஊடகங்களுக்கு உண்மையான விடயங்களை எழுத முடியாது. அதற்காக பேனையோ கெமராவோ இயங்குவது இல்லை.

நாட்டு மக்களிடம் பிரச்சினைகளை ஏற்படுத்தும் விதமாக தகவலை பரப்பாமல் பொறுப்புடன் அனைத்து ஊடகங்களும் நடந்துகொள்ள வேண்டும்.

மேலும் அவசியமற்ற தீய விடயங்களை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டியது அவசியமாகும்.

அதேபோன்று நாம் முன்னேறி செல்ல வேண்டுமென்றால் வலுவான சட்ட ரீதியான தீர்மானங்கள் சிலவற்றை முன்னெடுக்க வேண்டிய தேவையுள்ளது.

இதேவேளை அண்மையில் மீதொட்ட முல்ல குப்பை மேடு சரிந்து பலர் உயிரிழந்தபோது அவ்விடயம் குறித்து பலரும் பேசி சில நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக கூறினர். ஆனால் தற்போது அதனை எவரும் பொறுப்பேற்காமல் கவனிப்பாரன்றி கிடக்கிறது’’ எனவும் சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டினார்.