பாராளுமன்ற தெரிவுக்குழு செயற்பட இடமளித்து ஜனாதிபதியும் பிரதமரும் தவறிழைத்து விட்டனர்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை செய்வதற்கு பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கு இடமளித்து ஜனாதிபதியும், பிரதமரும் தவறிழைத்து விட்டனர். பாதுகாப்புத்துறை அதிகாரிகாரிகளை பொதுவெளியில் விசாரணைக்குட்படுத்தி விசாரணைத் தகவல்களை கோருவதால் அரச இரகசியங்கள் வெளியாகின்றன. அது தண்டனைக்குரிய குற்றமாகும் என பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜேதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பாராளுமன்ற தெரிவுக்குழுவின் விசாரணைகள் மூலம் அரச இரகசியங்கள் பகிரங்கமாகின்றமை உட்பட தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் உள்ளிட்ட செயற்பாடுகள் தொடர்பில் சபாநாயகர் கருஜெயசூரியவிற்கு விஜேதாஸ ராஜபக்ஷ எழுத்துமூலம் கவனத்துக் கொண்டு வந்துள்ள நிலையில் அவ்விடயம் சம்பந்தமாக வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

உயிர்த்த ஞாயிறு அன்று மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்கள் குறித்து விசாரணைகளைச் செய்வதற்கு பாராளுமன்ற தெரிவிக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதில் தற்போதுவரையில், பாதுகாப்புச் செயலாளர்எஸ்.எச்.சாந்த கோட்டேகொட, புலனாய்வுப்பிரிவுத் தலைவர் சிசிரமென்டிஸ், முன்னாள் பிரதிபொலிஸ்மா அதிபர் நலக்க டி சில்வா, பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்ணான்டோ ஆகியோர் சாட்சியமளித்துள்ளனர்.

இவ்வாறு முக்கியமான பாதுகாப்புத்துறை அதிகாரிகளை அழைத்து விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் அரச இரகசியங்கள் பகிரங்கப்படுத்தப்படுகின்றன. அது தண்டனைக்குரிய குற்றமாகும். எமது நாட்டில் அரச பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக 1955ஆம் ஆண்டு 32ஆம் இலக்க அரச இரகசிய சட்டம் இயற்றப்பட்டது.

இச் சட்டமானது 1955 ஆம் ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி முதல் எமது நாட்டில் நடைமுறையில் உள்ளது. இச்சட்டத்தின் இரண்டாம் சரத்திற்கு அமைவாக, இலங்கை அரசாங்கத்தின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு தேவையான நிறுவன, அமைப்பு, தொழில்நுட்ப தகவல்களை பாதுகாப்பதற்கு தேவையான ஒதுக்கீடுகள் செய்யப்படுகின்றன.

இந்நிலையில் இச்சட்டத்தின் 7ஆம் சரத்திற்கு அமைய பாதுகாப்பு சம்பந்தமான இரகசிய தகவல்கள், கோவைகளை எந்தவொரு தரப்புக்கும் வழங்குதல் தடைசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன் அவ்வாறான உத்தியோக பூர்வ தகவல்களை அறிந்த ஒருவரோ அல்லது குழுவினரோ அந்த தகவல்களை முப்படைகளின் தலைவர், பொலிஸ் மா அதிபர், இராணுவ தளபதி, கடற்படை தளபதி, விமான படைத்தளபதி மற்றும் புலனாய்வு பிரிவின் தலைவர் உள்ளிட்ட அதிகாரம் பெற்ற அதிகாரிகளுக்கு மட்டுமே வழங்க முடியும்.

அத்துடன் இச்சட்டத்தின் 8ஆம் சரத்தின் பிரகாரம் அரச இரகசிய தகவல்களை பெற்றுக்கொள்ள உரித்தற்ற நபர் அல்லது குழுவினர் அந்த தகவல்களை வாய்மூலமோ அல்லது ஆவணங்கள் மூலமோ பெற்றுக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமுமாகும் என்றும் உள்ளது.

ஆகவே இந்த விடயங்களை குறிப்பிட்டு பாராளுமன்ற தெரிவுக்குழவின் பகிரங்கமான செயற்பாட்டினை வலுவற்றதாக்குமாறு கோரி சபாநாயகர் கருஜெயசூரியவுக்கு கடிதம் அனுப்பியுள்ளேன். மேலும் ஜனாதிபதியும், பிரதமலும் தெரிவுக்குழவை அமைப்பதற்கு இடமளித்து பாரிய தவறிழைத்து விட்டனர்.

குறித்த தாக்குதல் சம்பவங்கள் சம்பந்தமாக ஜனாதிபதி ஆணைக்குழு, உட்பட பாதுகாப்பு துறையின் சார்பிலும் குழுக்கள் செயற்பட்டு வருகின்றன. ஆத்துடன் உயர்நீதிமன்றத்திலும் மனுத்தாக்கல் செய்வதற்கு ஏற்பாடுகள் காணப்படுகின்றன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றார்.