கல்முனை உண்ணாவிரத போராட்டத்தில் கைதான இளைஞன் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை

பாறுக் ஷிஹான்

கல்முனை உண்ணாவிரத போராட்டத்தை நிறைவுறுத்த சென்ற பொலிஸாரின் கடமைக்கு இடையூறு செய்தமை தொடர்பாக கைதான இளைஞன் எச்சரிக்கை செய்யப்பட்டு  விடுதலை செய்யப்பட்டுள்ளார்.


கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டும் எனக்கோரி கடந்த ஒரு வார காலமாக   முன்னெடுக்கப்பட்டு வந்த உண்ணாவிரத போராட்டம் நிறைவு செய்யப்பட்ட பின்னர் ஞாயிற்றுக்கிழமை (23)அவ்விடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் ஹேரத் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜெயநித்தி ஆகியோர் சென்று போராட்டக்கார்களான கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர்  கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம்  கல்முனை தமிழ் வர்த்தக சங்க தலைவர் லிங்கராஜா ஆகியோரை சந்தித்து போராட்டம் இடம் பெற்ற பகுதியில் உள்ள பொதுப்போக்குவரத்திற்கு தடையாக உள்ள கொட்டகைகளை அகற்றி போராட்டத்தை முடிவிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொண்டிருந்தனர்.

இதன் போது சம்பவ இடத்திற்கு வருகை தந்த  இளைஞன் போராட்டகாரர்களிடம் அரசாங்க அதிபர் டீ.எம்.எல்.பண்டாரநாயகவினால்   கடிதம் ஒன்றை தற்போது ஒருவரிடம் அனுப்பி வைத்துள்ளதாகவும் அந்த கடிதம் உள்நாட்டலுவல்கள்  மாகாணசபை மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் வஜிர அபேவர்தனவினால் போராட்டகார்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பதற்காகவே அம்பாறை மாவட்ட அரச அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அதனை பெற்றுக்கொண்டால்  மாத்திரமே போராட்டத்தை நிறைவு செய்ய முடியும் என பொலிஸாரிடம்  கூறுமாறு போராட்டகார்களை கேட்டுக்கொண்டார்.

ஆனால் போராட்டத்தில் இருந்த இருவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த கடிதம் தற்போது தேவையில்லை போராட்டத்தை நாம் ஞானசார தேரர் தலைமையில் வந்திருந்த பௌத்த தேரர்களின் வேண்டுகோளை ஏற்றே நிறைவு செய்தாக கூறி அவ்விடத்தில் இருந்து போராட்டகாரர்களில்  ஒருவரான  கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றிய தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு அவ்விடத்தில் இருந்து எழுந்து செல்ல முற்பட்டார்.

இந்நிலையில் குறித்த போராட்ட குழுக்குள்  ஏதோ சச்சரவு இடம்பெறுகின்றது என்பதை ஊகித்த கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஏ.பீ.ஹேரத் அவ்விளைஞனிடம் என்ன விடயம் சம்பந்தமாக போராட்டகாரர்களிடம் தெரிவித்தீர்கள் என வினவினார். இதன் போது போராட்டகாரர்களுக்கு ஒரு கடிதம் ஒன்று அரசாங்க அரசாங்க அதிபரான டீ.எம்.எல்.பண்டாரநாயகவினால் வழங்கப்படும் என்பதை தான் வலியுறுத்தியதாகவும் அக்கடிதம் கிடைத்ததும்  குறித்த  அப்போராட்டத்தை நிறைவு செய்ய முடியும் என்பதை கூறியதாக தெரிவித்தேன் என பொலிஸ் அத்தியட்சகரிடம் கூறினார்.


உடனடியாக தனக்கு அவ்வாறு எந்தவித உத்தரவோ வேண்டுகோளோ சொல்லப்படவில்லை என கூறி அவ்விடத்தில் இருந்து  அரசாங்க அதிபரை தொலைபேசி வாயிலாக  தொடர்பு கொண்ட கல்முனை பொலிஸ் அத்தியட்சகர் குறித்த கடிதம் தொடர்பாக வினவியுள்ளார்.இந்நிலையில் அரசாங்க அதிபரும்  அந்த  கடிதம் தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது அழுத்தமாக அவ்விடத்தில்  குறிப்பிட்டுள்ளார்.

இந்த தொலைபேசி உரையாடலை கோபத்துடன் நிறுத்திய பொலிஸ் அத்தியட்சகர்  அவ்விடத்தில் இருந்து நழுவி  கல்முனை தமிழ் உப பிரதேச செயலகத்தை நோக்கி  வேகமாக சென்ற குறித்த இளைஞனை கைது செய்யுமாறு கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு உத்தரவிட்டார்.

உத்தரவிற்கு அமைய செயற்பட்ட பொறுப்பதிகாரி குறித்த இளைஞனை பின்தொடர்ந்து கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றார்.அவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரான குறித்த இளைஞனை   கைது செய்த போது சம்பவ இடத்தில்  ஒளிப்படம் எடுக்க முற்பட்ட ஊடகவியலாளர்களை மிரட்டும் தொனியில் அவ்விடத்தில் நின்றவர்கள் எச்சரிக்கை செய்ததுடன் ஊடக கடமைக்கும் இடையூறு செயய முற்பட்டனர்.

எனினும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஊடகவியலாளரின் கடமையைக்கு இடையூறு செய்ய வந்தவர்களை  எச்சரிக்கை செய்யும் முகமாக தனது செயற்பாட்டை முன்னெடுத்தார்.

இறுதியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட சந்தேக நபராக இளைஞனை போராட்டக்கார்கள் விடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் எச்சரிக்கை செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.