ஜனாதிபதி தலைமையில் இன்று அமைச்சரவை


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (18) அமைச்சரவை கூடவுள்ளதாக அமைச்சரும் சபை முதல்வருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

கடந்த வாரம் இது தொடர்பில் சர்ச்சைகள் நிலவியதாகவும் ஜனாதிபதிக்கும் நிறைவேற்று சபையான அமைச்சரவைக்குமிடையில் பிரச்சினைகள் எழுந்துள்ள நிலையில், இம்முறை அமைச்சரவை அமர்வு இடம்பெறுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருவதாக அமைச்சரிடம் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் கிரியெல்ல மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்குமிடையில் அதுதொடர்பில் பேச்சுவார்த்தை இடம்பெற்று பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணப்பட்டுள்ளன.

அதற்கிணங்க இன்றைய தினம் ஜனாதிபதியின் தலைமையில் அமைச்சரவை கூடும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார்.

இதேவேளை, இராஜினாமா செய்துள்ள முஸ்லிம் அமைச்சர்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று அமைச்சரவையில் அதுதொடர்பில் ஆராயப்படவுள்ளதாகவும் அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது