கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலய பெண் அதிபருக்கு ஆதரவாக போராட்டம்



-பாறுக் ஷிஹான்-

அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட கல்முனை அல்மிஸ்பாஹ் மகா வித்தியாலய பெண் அதிபருக்கு ஆதரவாக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

இன்று(12) கல்முனை வலயக்கல்வி அலுவலகத்தின் முன்னால் ஒன்று கூடிய பாடசாலை அபிவிருத்தி சங்கம் பழைய மாணவர் சங்கம் மற்றும் பாடசாலையின் பெற்றோர் சங்கம் இணைந்து குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதன் போது குறித்த பாடசாலையின் புதிய அதிபரை மாற்றி பெண் அதிபரை நியமிக்க வேண்டும் எனவும் பாடசாலையில் பணியாற்றும் 3 ஆசிரியர்களை பாடசாலையில் இருந்து இடமாற்றம் செய்யுமாறு வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இறுதியாக மகஜர் ஒன்று வலயக்கல்வி பணிப்பாளரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண் அதிபருக்கு எதிராக இனந்தெரியாத நபர்கள் அச்சுறுத்தல் விடுத்ததை அடுத்து கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேற்குறித்த பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய பெண் அதிபரை கடமையில் இடைநிறுத்தி புதிய அதிபர் ஒருவரை நியமித்தமைக்காக தற்போது பல்வேறு வடிவங்களில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இதனால் பாடசாலை மாணவர்களின் கல்வி நிலை பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலதிக விசாரணைகள் உரிய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.