கல்முனை வர்த்தக நிலையங்களை பி.ப. 4.00 மணியுடன் மூடுமாறு வேண்டுகோள்




இன்று ஞாயிற்றுக்கிழமை கல்முனை மாநகரில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இன ஐக்கியத்திற்கான பொசன் விழாவை முன்னிட்டு, கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தக நிலையங்களையும்  பிற்பகல் 4.00 மணியுடன் மூடிவிட்டு அனைத்து வர்த்தகர்களும் பணியாளர்களும் பொசன் விழாவில் கலந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகிறது.

இந்த பொஷன் விழா தொடர்பான ஏற்பாட்டுக்குழுவின் கலந்துரையாடல்  சனிக்கிழமை (15) மாலை கல்முனை மாநகர சபை முதல்வர் செயலகத்தில் மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தலைமையில் நடைபெற்றபோது, வர்த்தக சங்கங்களின் இணக்கப்பாட்டுடன் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இவ்வேண்டுகோள் விடுக்கப்படுவதாக அறிவிக்கப்படுகிறது.

இக்கலந்துரையாடலில் கல்முனை விகாராதிபதி வண.ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், பொலிஸ் மற்றும் இராணுவ உயரதிகாரிகள், கல்முனை வர்த்தகர் சங்கம், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம், கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் என்பவற்றின் பிரதிநிதிகளும் பிரதி மேயர் காத்தமுத்து கணேஷ், பாண்டிருப்பு ஐ.தே.க.அமைப்பாளர் விநாயகமூர்த்தி உள்ளிட்ட தமிழ் பிரதிநிதிகளும் பங்கேற்றிருந்தனர். 

கல்முனை மாநகர ஐக்கிய சதுக்கத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் இந்த இன ஐக்கிய பொசன் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் ஒருங்கிணைப்பில் கல்முனை வர்த்தகர் சங்கம், சாய்ந்தமருது- மாளிகைக்காடு வர்த்தகர் சங்கம், கல்முனை கல்முனை பொதுச் சந்தை வர்த்தகர் சங்கம் என்பனவும் தமிழ் மக்களும் இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்துள்ளனர்.

இவ்விழாவில் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து வர்த்தகர்களும் பணியாளர்களும் பங்குபற்றும் பொருட்டு இன்று  பிற்பகல் 4.00 மணியுடன் அனைத்து வர்த்தக நிலையங்களையும் மூடி, ஒத்துழைப்பு வழங்குவதென மேற்படி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.