சாய்ந்தமருது பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் ; உணவு ஒவ்வாமையினால் பாதிப்பு



(நூருல் ஹுதா உமர்)

கல்முனை கல்விவலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஸ்ரப் வித்தியாலய மாணவர்களின் உணவு ஒவ்வாமை காரணமாக சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் குறித்த பாடசாலையில் கல்வி பயில்வதுடன் சகல மாணவர்களும் குறித்த பாடசாலை உணவகத்தில் தான் இன்று (10) உணவருந்தி இருந்ததாகவும் அதில் 13 மாணவர்கள் வயிற்றுவலிக்கு ஆளானதை தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்ததாக பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் எமது நிருபரான நூருல் ஹுதாவிடம் தெரிவித்தார். 

பல வருடங்களாக பாடசாலையில் உணவகம் நடத்தி வரும் உசைன் என்பவரின் உணவகத்தில் உணவருந்திய மாணவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். உணவகத்தை தற்காலியமாக மூடிவிட்டு மாணவர்கள் சாப்பிட்ட உணவின் பகுதிகளையும், மாதிரிகளையும் பரிசோதனைக்காக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள் எடுத்து சென்றுள்ளனர். 

பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சாய்ந்தமருது வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு சில மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டாலும் பல மாணவர்களுக்கு தொடர்ந்தும் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக விசாரணைக்கு பின்னரே வைத்தியசாலை வட்டாரங்கள் கருத்து தெரிவிக்க முடியும் என அறிவித்துள்ளார்கள். 

பெற்றோர்களும், பிரதேசவாசிகளும் பதட்டத்துடன் வைத்தியசாலை முன்றலிலும், பாடசாலையிலும் குழுமி நிற்கின்றனர்.