ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித்திருக்கும் அக் கட்சியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான கே.என். டக்ளஸ் தேவானந்தா, தமிழ் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்ப்பவர்களுக்கு நிச்சயமாக ஆதரவை வழங்குவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஸ்ரான்லி வீதியிலுள்ள அக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாட்டில் அடுத்ததாக ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடைபெற இருக்கின்றது. அந்த தேர்தல் தொடர்பில் பல்வேறு கருத்தக்கள் பல தரப்பிலும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந் நிலையில் அத் தேர்தலில் யாரை ஆதரிப்பது அல்லது யாருக்கு ஆதரவை வழங்குவது என்பது எமது கட்சிக்கு ஒளிவு மறைவுகள் இல்லை.
ஆனாலும் யாரை ஆதரிப்பதானாலும் தமிழ் மக்கள் தொடர்பில் நாம் கோரிக்கைகளை முன்வைப்போம். அந்தக் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கின்றவர்களுக்கு நிச்சயமாக எமது ஆதரவை வழங்குepவோம். அதே நேரம் இத் தேர்தல் குறித்து இப்ப பேசப்பட்டாலும் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் யார் யார் என்பதும் தெரியவில்லை.
ஆகையினால் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதும் எமது அடுத்த கட்ட நடவடிக்கையை நாம் முன்னெடுப்போம் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா குறிப்பிட்டுள்ளார்.