உலகளாவிய நகர முல்வர்கள் பாராளுமன்றத்தின் பிரதிநிதியாக கல்முனை முதல்வர் றகீப் தெரிவு



(அஸ்லம் எஸ்.மௌலானா)

நெதர்லாந்து நாட்டின் ஹேக் நகரில் தலைமையகத்தை கொண்டு இயங்குகின்ற உலகளாவிய நகர முதல்வர்களின் பாராளுமன்றம் (Global Parliament of Mayors) எனும் சர்வதேச அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

எதிர்வரும் நவம்பர் மாதம் 09ஆம் திகதி தொடக்கம் 11ஆம் திகதி வரை மூன்று நாட்கள் தென்னாபிரிக்காவின் டேர்பன் நகரில் இடம்பெறவுள்ள இவ்வமைப்பின் வருடாந்த சர்வதேசப் பேரவை மாநாட்டில் கல்முனை முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள், இலங்கை சார்பில் பங்குபற்றவிருக்கிறார்.

'2020ஆம் ஆண்டில் நகரங்களுக்கான வலுவூட்டல், உலக தரத்தில் பன்முக ஆழுகைக்கான ஒழுங்குபடுத்தல்- ஒரு தசாப்த மாற்றம்' எனும் தொனிப்பொருளில் இம்மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை உலகளாவிய ரீதியில் மாநகராட்சி மன்றங்கள் ஊடாக 2030 ஆம் ஆண்டுக்கான நிலைபேறான அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பிலான பிரகடனமும் இந்த சர்வதேச பேரவை மாநாட்டில் நிறைவேற்றப்படவிருப்பதாக மேலும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய நகர முதல்வர்களின் பாராளுமன்றம் எனும் அமைப்பின் இலங்கைப் பிரதிநிதியாக கல்முனை மாநகர முதல்வர் ஏ.எம்.றகீப் அவர்கள் தெரிவு செய்யப்பட்டமைக்கான நியமனக்கடிதம் மற்றும் டேர்பன் சர்வதேச மாநாட்டில் பங்குப்பற்றுமாறு அழைப்பு விடுக்கும் கடிதம் என்பன உலகளாவிய நகர முதல்வர்கள் பாராளுமன்றத்தின் தவிசாளரினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.