சாய்ந்தமருது பாடசாலை ஒவ்வாமை உணவு மாதிரி பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைப்பு



(பாறுக் ஷிஹான்)


சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய மாணவர்களிற்காக வழங்கப்பட்ட உணவு மாதிரிகள் பரிசோதனைக்காக கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்தனர்.

புதன்கிழமை(10) மதியம் கல்முனை கல்வி வலயத்தின் சாய்ந்தமருது கோட்டத்தின் கீழ் உள்ள சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலய மாணவர்கள் சுமார் 24 க்கும் அதிகமானோர் உணவு ஒவ்வாமை காரணமாக பாதிக்கப்பட்டு சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலையில் மாணவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிசசைக்காக அனுமதிக்கப்பட்ட மாணவர்களை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பரிசோதனை செய்து வருகின்றனர்.

குறித்த பாடசாலை உணவகத்தில் மாணவர்களிற்கு வழங்கப்பட்ட பகல் உணவு ஒவ்வாமைக்கு காரணம் எனவும் அதை உணவருந்திய வேளை மாணவர்கள் மயக்கமுற்றதாகவும் இவ்வாறு உணவருந்தியவர்களில் சுமார் 24 க்கும் அதிகமான மாணவர்கள் வயிற்று வலி உபாதைக்கு உள்ளாகியதனைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டதாக பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் குறித்த உணவகம் தற்காலிமாக மூடப்பட்டதுடன் மாணவர்கள் உட்கொண்ட உணவின் பகுதிகளையும் மாதிரிகளையும் பரிசோதனைக்காக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் எடுத்து சென்றுள்ளனர்.