கல்முனையில் செயற்படும் அனைத்து வாகனங்களும் மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும்



(அஸ்லம் எஸ்.மௌலானா) 

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் சேவையில் (Hire) ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலின் பேரில் தேசிய பாதுகாாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு என்பவற்றுக்கு ஒத்துழைப்பு வழங்கும் முகமாக கல்முனை மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் அவர்களுடன் கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோர்  நடாத்திய கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் பிரகாரம் கல்முனை மாநகர சபை எல்லைக்குள் வாடகைக்கு சேவையில் (Hire) ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகள், வேன்கள், லொறிகள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் கல்முனை மாநகர சபையில் உடனடியாக பதிவு செய்யப்பட வேண்டும் எனவும் கல்முனை மாநகர சபையில் இதற்காக விசேட கரும பீடம் ஒன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் முதல்வர் ஏ.எம்.றகீப் தெரிவித்தார்.

வாகனங்களின் உரிமையாளர்கள் அல்லது பாவனையில் வைத்திருப்போர் அவ்வாகனங்களின் புத்தகங்களுடன் மாநகர சபைக்கு வருகைதந்து இக்கருமபீடத்தில் கட்டணம் எனுவுமின்றி இலவசமாக வாகனங்களை பதிவு செய்து கொள்ள முடியும் எனவும் இவ்வாறு பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு மாநகர சபையினால் பதிவிலக்கம் ஒன்று வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை பொலிஸ் சோதனைகளின்போது குறித்த வாகனங்கள், கல்முனை மாநகர சபையில் பதிவு செய்யப்பட்டதற்கான இப்பதிவிலக்கத்தை காண்பிப்பது அவசியம் என கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் எச்.எம்.ஹேரத் வலியுறுத்தியுள்ளார் என முதல்வர் ஏ.எம்.றகீப் மேலும் குறிப்பிட்டார்.