கல்லடி அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவம்



கல்லடி - உப்போடை, நொச்சிமுனை அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவமானது 04.08.2019 தொடக்கம் திருவிழாக்கள் நடைபெற்று 12.08.2019 அன்று திருக்கும்பம் சொரிதல் வைபவத்துடன் நிறைவடையவுள்ளது.

தேத்தாமர நிழலில் எழுந்தருளி அருள்பாலிக்கும் பேச்சியம்மன் ஆலய கதவு திறத்தல், கும்பம் வைத்தல் நிகழ்வு 04.08.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆலய பரிபாலன சபையினர் சார்பாக நடத்தப்பட்டது. 05.08.2019 திங்கட்கிழமை பகல் சடங்கினை டாக்டர் பூபாலரெத்தினம் குடும்பமும் இரவுச் சடங்கினை ஊர்க்குடிமகன் மா.சுந்தரலிங்கம் அவர்களும் நடத்துவித்தனர். செவ்வாய்க்கிழமை 06.08.2019 'கண்ணகித் தாயாரிடம் செல்லல்' நிகழ்வினை 1ஆம் குறிச்சிப் பொதுமக்கள் செய்தனர்.

07.08.2019 புதன்கிழமை இன்று 2ஆம் குறிச்சிப் பொதுமக்கள் திருச்சடங்கை நடத்துவதுடன் தொடர்ந்து 08.08.2019 வியாழக்கிழமை 3ஆம் குறிச்சிப் பொதுமக்களும், 09.08.2019 வெள்ளிக்கிழமை பலிச்சடங்கினை 4ஆம் குறிச்சிப் பொதுமக்களும், 10.08.2019 சனிக்கிழமை 5ஆம் குறிச்சிப் பொதுமக்களும் நடத்தவிருக்கின்றனர்.

11.08.2019 ஞாயிற்றுக்கிழமை மடிப்பிச்சை எடுத்தல், நெல் குற்றல் நிகழ்வுகளைத் தொடர்ந்து, 12.08.2019 திங்கட்கிழமை திருக்கும்பம் சொரிதலுடன் சடங்கு வைபவம் நிறைவடைகிறது.