25 வருட வாக்குறுதியை மரணத் தறுவாயிலேனும் நிறைவேற்றுங்கள் – சுமந்திரன் வேண்டுகோள்

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை பின்னர் நீக்க முயற்சி செய்யும் அமைச்சர்கள் 20ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தை கொண்டுவர ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் 25 வருட வாக்குறுதியை மரணத்தின் இறுதித் தருணத்திலேனும் நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் தளத்தில் இன்று (சனிக்கிழமை) இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதே தமது நிலைப்பாடு எனவும் ஆனால் அதனைச் செய்வதற்கான நேரம் இதுவல்ல என்று கூறுபவர்களுக்கு தான் சவால் விடுப்பதாகவும் சுமந்திரன் கூறியுள்ளார்.

மேலும், “ஜனாதிபதித் தேர்தல் முடிந்த பிற்பாடு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழிப்பீர்களெனின் அதற்கு முன்கூட்டிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் இப்போதே நாடாளுமன்றத்தில் 20ஆவது திருத்தத்தை நிறைவேற்றுங்கள்.

அதன்மூலம் ஜனாதிபதி முறை ஒழிப்பிற்கான முதற்படியை எடுத்து வைத்து விட்டோம். அடுத்தகட்ட நடவடிக்கைகளை தேர்தலின் பின்னர் முன்னெடுப்போம் என்ற நம்பிக்கையை மக்களுக்கு வழங்குங்கள்.

அதனைக்கூடச் செய்ய முடியாது என்றால் அவர்களுடைய கொள்கை உண்மையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதாக இருக்கின்றதா என்ற சந்தேகம் எழுவதைத் தவிர்க்க முடியாது என்று சுமந்திரன் தெரிவித்திருக்கிறார்.