29 வயது இளைஞனின் உயிரை பறித்த விபத்து

பொலன்னறுவை - ஹபரணை பிரதான வீதியின் ஹபரணை மொரகஸ்வெவ பிரதேசத்தில் மணல் ஏற்றிச் சென்ற டிப்பர் ஒன்றும் சிறிய ரக லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் சிறிய ரக லொறியின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்றிரவு இந்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில், லொறியின் உதவியாளர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட லலித் குமார என்ற 29 வயதுடைய இளைஞன் ஒருவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளான்.

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

டிப்பர் வாகனத்தின் சாரதியின் கவனயீனம் காரணமாக இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ள நிலையில், சந்தேகநபர் இன்றைய தினம் (07) ஹிங்குராங்கொடை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளார்.

ஹபரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.