காணாமல் போனவர்கள் - சான்றிதழை கொண்டுள்ளவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவு

காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள குடும்ப உறுப்பினர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா கொடுப்பனவை அரசாங்கம் வழங்க தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவையில் அரசாங்கம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

காணாமல் போனமை குறித்து உறுதிசெய்யப்பட்ட காணாமற் போனவர்களுக்காக இடைக்கால நிவாரணத்தை வழங்குதல் என்ற தலைப்பில் இது தொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை கொண்டுள்ள பயனாளிகளுக்காக 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி தொடக்கம் ஒவ்வொரு மாதமும் 10ஆவது தினத்தன்று நேரடியாக பணத்தை வைப்பீடு செய்வதன் மூலம் மாதாந்தம் 6,000 ரூபா இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்காகவும் காணாமல் போன நபர் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு அழுத்தத்திற்கு உள்ளான குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை வழங்குமாறு பதிவாளரின் திணைக்களத்திற்கு உத்தரவை பிறப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சர் அவர்களும் தேசிய ஒருமைப்பாடு அரசகரும மொழி சமூக மேம்பாடு மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சர் அவர்களும் கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.