கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் ஆய்வுகூடத் திறப்புவிழா



'அண்மையிலுள்ள பாடசாலையே சிறந்த பாடசாலை' எனும் கருப்பொருளில் மட்டக்களப்பு கல்லடி முகத்துவாரம் விபுலானந்தா வித்தியாலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கனிஸ்ட இரண்டாம் நிலை ஆய்வுகூடத் திறப்புவிழா 09.09.2019 திங்கட்கிழமை பாடசாலை அதிபர் T. இராஜமோகன் தலைமையில் நடைபெற்றது.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஞா. சிறிநேசன் அவர்களும் ,சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கௌரவ தி. சரவணபவான் மற்றும் மட்டக்களப்பு வலயக்கல்விப் பணிப்பாளர் V.மயில்வாகனம் அவர்களும் கௌரவ அதிதியாக மாநகரசபை உறுப்பினர் S.ஜெயந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் கௌரவ தி. சரவணபவான் அவர்கள் தமது உரையில் மட்டக்களப்பு மாவட்ட மாணவர்களின் இடைநிலைக்கல்வியானது பின்னோக்கிச் செல்கிறது 38% ஆன மாணவர்களே க.பொ.த சாதாரண தரத்தில் சித்திபெறக்கூடிய நிலையில் இருப்பதுடன் அண்ணளவாக 6500 மாணவர்கள் சித்திபெறாது உயர்தரம் கற்கும் தகுதியை இழக்கக்கூடிய துர்ப்பாக்கியநிலை ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் பொருட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்த கல்விச் செயற்பாட்டில் ஈடுபட வேண்டும். தற்போதைய காலகட்டத்தில் தொழிநுட்ப அறிவானது மாணவர்களுக்கு மிகவும் அவசியமானதொன்றாகும். இதற்காகவே இவ்வாறான ஆய்வுகூடங்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாநகரசபையும் மாணவர்களின் கல்விக்காக நவீனமயமாக்கப்பட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நூலகத்தினை நிறுவியுள்ள போதிலும் அதனை பயன்படுத்தும் வீதம் குறைவாகவே உள்ளது. இதனை மாணவர்கள் அதிகமாக பயன்படுத்த எம்மால் இலவச போக்குவரத்து வசதிகளைக்கூட எமது சமூகத்திற்காக செய்துதர முடியும்.

எதிர்கால சந்ததியினர் வழமைக்கு மாறாக தொழில்நுட்ப அறிவினைப் பயன்படுத்தி விஞ்ஞானியாகவோ அல்லது கணிதவியலாளர்களாகவோ உருவாக வேண்டும் எனக் கூறியதுடன் மாநகரசபையினால் விஞ்ஞானிகளை உருவாக்கும் செயற்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை  பற்றியும் அதில் மாணவர்களின் அதீத ஈடுபாடு உள்ளதாகவும் அதற்கு ஆசிரியர்கள் தங்களைத் தயார்படுத்தி அவர்களை வழிநடத்த வேண்டும் என்றும் தனது உரையில் குறிப்பிட்டார்.

பிரதம அதிதியுரையில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஞா. சிறிநேசன் அவர்கள் தொழில்நுட்பமே மாணவர்களின் இன்றைய முக்கிய தேவையாக இருப்பதுடன் ஆசிரியர்களும் மாணவர்களின் தேவையின்பொருட்டு புதுவிடயங்களை தேடி அறிந்துகொண்டு மாணவர்களின் அறிவு முதிர்ச்சிக்கு ஏற்ப கற்பிக்க வேண்டும் எனவும் மாநகரசபை முதல்வரின் கருத்துக்களையே தானும் இப்பாடசாலை சமூகத்திற்கு கூறவிளைவதாகவும் குறிப்பிட்டார்.