மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த வயோதிபருக்கு பிணை விண்ணப்பம் நிராகரிப்பு





வீதியில் சென்று கொண்டிருந்த பாடசாலை மாணவியை அழைத்து பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு பிணை விண்ணப்பம் மறுக்கப்பட்டு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று புதன்கிழமை(16) கல்முனை நீதிமன்ற நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது

சம்பவம் தொடர்பில் மேலும் அறியவருவதாவது
கடந்த ஒகஸ்ட் மாதம் சனிக்கிழமை (31) அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சந்தேக நபர் இரு நாட்கள் அட்டாளைச் சேனை பகுதியில் தலைமறைவாகியிருந்த கைதானார். குறித்த சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தியதை அடுத்து குறித்த வழக்கு தொடர்பில் மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து சந்தேக நபரின் சட்டத்தரணிகள் அவரின் வயதினை அடிக்கடி சுட்டிக்காட்டி பிணைவிண்ணப்பம் தொடுத்த போதிலும் நீதிவான் பாதிக்கப்பட்ட மாணவியின் வயதினை சுட்டிக்காட்டி பிணை விண்ணப்பத்தை மறுத்து வருவதுடன் எதிர்வரும் தவணையில் பாதிக்கப்பட்டவர் தொடர்பில் மருத்துவ அறிக்கையை சமர்ப்பித்த வைத்திய அதிகாரியின் வாக்குமூலத்தை மன்றிற்கு வழங்குமாறு கல்முனை நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

மேலும் குறித்த சந்தேக நபர் சார்பாக ஆஜரான சட்டத்தரணி சந்தேக நபரது வயது அவரது உடல்நலன் தொடர்பாக அடிக்கடி எடுத்து கூறி பிணை வழங்குமாறு கோருவது தொடர்பில் நீதிவானினால் ஆலோசனையுடன் நிராகரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சம்பவ தினமன்று கல்முனைகுடி சாஹிப் வீதி பகுதியை சேர்ந்த குறித்த மாணவி வீடு திரும்பிய வேளை சந்தேக நபரான கல்முனைகுடி கனீபா வீதி பகுதியை சேர்ந்த சந்தேக நபரான ஜெயினுத்தீன் அப்துல் கரீம் (58 வயது) என்பவர் அழைத்து தனக்கு சவர்க்காரம் ஒன்றினை வாங்கி தருமாறு கோரியதுடன் இதனை அடுத்து குறித்த மாணவியும் சவர்க்காரம் ஒன்றினை வாங்கி சந்தேக நபரது வீட்டிற்கு சென்று வழங்கியுள்ளார்.

இந்நிலையில் சந்தேக நபர் அம்மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்த வேளை அயலவர்கள் அதை கண்ணுற்று அவ்வீட்டிற்கு சென்றுள்ளனர்.இதன் போது அம்மாணவியை கைவிட்டு சந்தேக நபர் தப்பி சென்றிருந்தார்.

மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான செய்தி அப்பகுதிக்கு பரவ ஆரம்பித்த போது அதை அறிந்த சந்தேக நபர் தலைமறைவானார். பின்னர் இரண்டு நாட்களின் கடந்த நிலையில் சந்தேக நபரை அயலவர்களின் ஒத்துழைப்புடன் கைது செய்திருந்தனர்.இதன் போது பாதிக்கப்பட்ட மாணவி அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்தவரின் மகள் அங்குள்ள பாடசாலை ஒன்றின் ஆரம்ப கல்வி ஆசிரியையாக கடமையாற்றி வருகின்றார் என பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இவ்விடயம் தொடர்பாக எந்தவொரு அமைப்போ பெண்களுக்கான உரிமை காப்பகமோ எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லைஎன்பதும் குறிப்பிடத்தக்கது.