மட்டக்களப்பில் விஞ்ஞானத் திட்டம் ஆரம்பித்து வைப்பு

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் மற்றும் உயர் தரம் ஆகிய வகுப்புக்களைச் சேர்ந்த மாணவர்களுக்காக செயன்முறைப் பயிற்சிப் பட்டறை (Practical Workshop) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு கல்வி வலயத்தின் விஞ்ஞானப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ரீ. ஞானசேகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மண்முனைப்பற்று, மண்முனை வடக்கு, ஏறாவூர்ப்பற்று ஆகிய கோட்டக் கல்விப் பிரிவு மாணவர்களுக்கான செயன்முறைப் பயிற்சிப் பட்டறை நேற்று (வியாழக்கிழமை) ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பு கலைமகள் வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த செயன்முறைப் பயிற்சிப்பட்டறை அங்குரார்ப்பண நிகழ்வில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் விஞ்ஞானப் பிரிவுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் ரீ. ஞானசேகரன், கலைமகள் வித்தியாலய அதிபர் எஸ். தில்லைநாதன் உப அதிபர் நாகலிங்கம் இராசதுரை உட்பட ஆசிரியர்களும், மாணவர்களும் கலந்து கொண்டனர்.
இந்த செயன்முறைப் பயிற்சிப் பட்டறையில் உயிரியல் (Biology) இரசாயனவியல் (Chemistry) பௌதீகவியல் (physics)) ஆகிய பாடவிதானச் செயற்பாட்டுப் பயிற்சிகளும் கண்காட்சிகளும் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.