கோத்தாபாயவிற்கு எதிரான மனு நிராகரிப்பு !




ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கைப் பிரஜாவுரிமையை சவாலுக்கு உட்படுத்தி, மேன்​முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த ரிட் மனு, மூவரடங்கிய நீதியரசர்கள் குழுவால், சற்று முன்னர் ஏகமனதாக நிராகரிக்கப்பட்டது.

சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களான பேராசிரியர் சந்திரகுப்த தேனுவரவும் காமினி வியங்கொடவினாலும், இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு குறித்த பரிசீலனைகள், மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் யசந்த கோதாகொட, நீதியரசர்களாக அர்ஜுன ஒபேசேகர, மஹிந்த ஜயவர்தன ஆகியோர் முன்னிலையில், நேற்று முன்தினமும் நேற்றும், இன்றும் இடம்பெற்றுவந்த நிலையில், இன்று (04) மாலை 6 மணிக்கு, மனுவை நிராகரிப்பதாக, நீதியரசர்கள், ஏகமனதாகத் தீர்மானமெடுத்து அறிவித்தனர்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரும் பாதுகாப்பு அமைச்சின் முன்னாளர் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக மனு மீதான விசாரணை இன்று மதியம் நிறைவடைந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்ற மூவரடங்கிய நீதிபதிகள் முன்னிலையில் இந்த விசாரணை நேற்று முன்தினம் (02) ஆரம்பமானதுடன், நேற்றும் (03) இன்றும் (04) தொடர்ந்து இடம்பெற்றது.

இந்த நிலையில், கோட்டாபய ராஜபக்ஷவை இலங்கைப் பிரஜையாக ஏற்கக் கூடாதென உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்து, தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணைகள் நிறைவுக்கு வந்தன.

இதனையடுத்து, வழக்குடன் தொடர்புடைய ஆவணங்களை இன்று (04) பிற்பகல் 3.15 மணிக்கு முன்னர் நீதிமன்றில் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டது.

அத்துடன், வழக்கின் தீர்ப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டது.

குடிவரவு – குடியகல்வுத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர், ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர், உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அமைச்சின் செயலாளர், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பதில் பொலிஸ் மா அதிபர், குற்றப்புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் ஆகியோர் குறித்த மனுவின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் அமெரிக்க குடியுரிமையை இரத்து செய்ததாகக் கூறி, முறையான குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்காமல், இலங்கை கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டையைப் பெற்றுள்ளதாக குறித்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டை பயன்பாட்டை, தடுத்து இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பிக்குமாறும் குறித்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.