மக்கள் மத்தியில் நேர்மையான வியாபார சூழலை பாதுகாத்தல்

பாவனையாளர் அலுவலக அதிகாரசபையினால் இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் துண்டுப்பிரசுரங்களை விநியோகிக்கும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பாவனையாளர்களை பாதுகாக்கும் நோக்கிலே இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலான துண்டுப்பிரசுர விநியோகம் மட்டக்களப்பு நகரிலே இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இவ்விழிப்புணர்வின் பிரதான நோக்கம் மக்கள் மத்தியில் நேர்மையான வியாபார சூழலை பாதுகாக்கப்பட்ட பாவனையாளர்களை உருவாக்கும் இவ்விழிப்புணர்வினை பாவனையாளர்கள் அதிகாரசபை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

பாவனையாளர்களை வலுப்படுத்தலும் சந்தையை ஒழுங்குபடுத்தலும் வியாபார போட்டியை ஊக்குவிப்பதன் மூலம் பாவனையாளருக்கு தரமான பொருட்களை நியாயமான விலையில் பெற்றுக்கொடுப்பதற்கும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்துவதும் பாவனைக்கு பொருந்தாத பொருட்களை தடைசெய்வதும் கட்டுப்பாடு விலையினை மீறி கூடிய விலையில் விற்கின்ற வர்த்தர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கையை மேற்கொள்வதன் மூலம் பாவனையாளர்களை சுரண்டலில் இருந்து பாதுகாத்து கொள்ளும் நோக்கமாகவே இவ்விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

பாவனையாளர்கள் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்கள் தரமானவையாகவும் விலை கட்டுப்பாடுக்கு உள்ளடங்கியவையாகவும் அமையாதவிடத்து அப்பொருட்களை வர்த்தகரிடம் திரும்பவும் கையளித்து தாம் செலுத்திய பணத்தை பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளும் இச்சட்டத்தின் மூலமாக ஏற்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பொருள் கொள்வனவு செய்யப்பட்டு முறையான பற்றுச்சீட்டுடன் பெறப்பட்ட பொருளின் குறைபாடு அல்லது தரக்குறைவு ஏற்படுகின்ற பட்சத்தில் பெற்றுக்கொண்ட வியாபாரியிடம் உரையாடி சரி செய்து கொள்ளப்படாத நிலையில் 90 நாட்களுக்குள் எழுத்து மூலமான முறைப்பாட்டினை பாவனையாளர் பாதுகாப்பு பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்புகின்ற சந்தர்ப்பத்தில் குறித்த வர்த்தர்களுக்கு சட்டநடவடிக்கையை மேற்கொண்டு வாடிக்கையாளருக்கு ஏதுவான தீர்வை பெறமுடியும் .இவ்வாறான வாடிக்கையாளர் சம்மந்தமான துண்டுப்பிரசுரங்கள் மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.