கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல்

(பாறுக் ஷிஹான்)
கேரளா கஞ்சாவினை தம்வசம் உடமையில் வைத்திருந்த குற்றசாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த பெண்ணிற்கு மீண்டும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு புதன்கிழமை(13) கல்முனை நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க உத்தரவிட்டார்.

கல்முனைகுடி பகுதியில் உள்ள தைக்கா வீதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த இளைஞன் கைதாகி இருந்தார்.இவ் இளைஞனின் வாக்குமூலத்தினை அடிப்படையாக கொண்டு அப்பகுதி வீடு ஒன்றில் கேரளா கஞ்சாவினை தராசில் அளவீடு செய்த இரு பெண்கள் கைதாகிய நிலையில் மன்றில் பல்வேறு சந்தர்ப்பங்களில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்தனர்.

இன்றைய விசாரணையின் போது அரச பகுப்பாய்வு திணைக்களத்திற்கு குறித்த கஞ்சாவை அனுப்பி நிறை மற்றும் கஞ்சாவின் தரம் குறித்து பகுப்பாய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிவான் நீதிமன்று கட்டளை பிறப்பித்துள்ளது.

இதில் ஆஜர்படுத்தப்பட்ட சந்தேக நபரான பாத்திமா சுமையா என்பவரை எதிர்வரும் நவம்பர் மாதம் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்க கல்முனை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டார்.