இளம் குடும்பஸ்தர்களான கணவன் மனைவியினது சடலங்கள் கண்டெடுப்பு



மட்டக்களப்பு– வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள வாகனேரி மானாவாரிக் கண்டம் எனும் பகுதியில் இளம் குடும்பஸ்தர்களான கணவன் மற்றும் மனைவியின சடலங்கள் பொலிஸாரால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

நாகதம்பிரான் கோயில் வீதி, கிண்ணையடி வாழைச்சேனை எனும் முகவரியைச் சேர்ந்த நமசிவாயம் குணம், (வயது 35) விநாயகன் தேவி (வயது 30) ஆகிய இருவரினதும் சடலங்களையே இன்று (சனிக்கிழமை) முற்பகல் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

வாகனேரி- மானாவாரிக் கண்டத்திலுள்ள வயல் வாடியில் மனைவியும் அங்குள்ள காட்டுப் பகுதியில் கணவனும் சடலமாகக் கிடைப்பதை அவதானித்த அப்பகுதியால் சென்றவர்கள் பொலிஸாருக்கும் உறவினர்களுக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

அதனடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார், கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரினதும் சடங்களை மீட்டுள்ளனர்.

சடலங்கள் உடற்கூறாய்வுப் பரிசோதனைகளுக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்குக் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.