படகு கவிழ்ந்ததில் ஒருவர் பலி ! இருவர் வைத்தியசாலையில் ! இருவரை தேடும் பணிகள் தொடர்கிறது

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உப்பாறு பாலத்திற்கு அருகில் மீன்பிடிக்கச் சென்ற ஜவர் படகு கவிழ்ந்ததில் மூவர் மீட்கப்பட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புல்மோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த, இக்பால் இல்ஹாம் (16) என்பவரே உயிரிழந்துள்ளார்.

இவர் இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆளங்கேணியைச் சேர்ந்த மற்றைய இருவரும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவர் கஜேந்திரன் எனும் 31 வயதானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தெரியவருவதாவது

பொழுதுபோக்காக படகொன்றில் மீன் பிடிப்பதற்காக சென்ற ஐவர் படகு கவிழ்ந்ததில் இவ்வசம்பாவிதம் இடம்பெற்றுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர். இதில் இருவர் காணாமல் போயுள்ள நிலையில் மூவர் நீந்தி கரைக்கு வந்துள்ளனர். மீட்கப்பட்ட மூவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் தற்பொழுது கிண்ணியா தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காணாமல் போன இருவரையும் தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்.

காணாமல் போனவர்கள் கிண்ணியா பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் இது தொடர்பிலான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இருவரை தேடும் பணியில் கடற்படையினரும் பிரதேச மக்களும் ஈடுபட்டுள்ளனர்.