தேர்தல் தோல்விக்கு பௌத்த மக்களே காரணம் – ரணில்



பௌத்த மக்களினதும் இளைஞர்களினதும் மத்திய வர்க்கத்தினரினதும் வாக்குகள் கிடைக்காமையே ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைய பிரதான காரணம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் அக்கட்சியின் இளைஞரணியுடன் நேற்று (திங்கட்கிழமை) நடத்திய கலந்துரையாடலின் போதே இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை ஆராய்ந்து பார்க்கும்போது எமக்கு பௌத்த அடிப்படையிலான மத்திய வர்க்கத்தினதும் இளைய சமுதாயத்தினதும் வாக்குகள் கிடைக்கவில்லை என்பது தெளிவாகின்றது.

எனவே இது குறித்து மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடி எமது அடுத்தகட்ட செயற்திட்டங்களைத் தயாரிக்கவேண்டும்.

தற்போது எமது குறைபாடுகள் என்னவென்பதை அறிந்துகொண்டு முன்நோக்கிப் பயணிக்க வேண்டுமே தவிர ஒருவரோடு ஒருவர் வாக்குவாதம் செய்வதில் எவ்வித பயனுமில்லை” என மேலும் தெரிவித்தார்.