தீவிரவாதிகளை தோற்கடிப்பது ஒன்றும் கடினம் அல்ல! கோட்டா செய்து முடிப்பார் – கெஹலிய



நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, சாத்தியமான வினைத்திறனான நடவடிக்கைகளை முன்னெடுப்பாரென இராஜாங்க அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “ஜனாதிபதித் தேர்தலுக்குப் பின்னர், ஜனாதிபதிக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் அதனை ஜனாதிபதி பெரிதாகக் கருதவில்லை.

மேலும் முப்பது ஆண்டுகால யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முடிந்த எங்களுக்கு, தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் தீவிரவாதிகளை தோற்கடிப்பது கடினம் அல்ல.

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஒவ்வொரு சாத்தியமான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகிறார்.

இதேவேளை நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலில் சிறந்த வெற்றியை நாம் பெற்றுள்ளோம். இந்நிலையில் வெற்றிப்பெற்ற கட்சிக்கு யாரும் மீண்டும் சவால் விடுவார்கள் என்று நாங்கள் நம்பவில்லை.

அத்துடன் இருக்கும் கட்சியின் அடையாளத்தையும் மாற்ற வேண்டிய அவசியமில்லை” என குறிப்பிட்டுள்ளார்.