ஜனாதிபதி - பிரதமருக்கிடையில் பிரச்சினை வெடிக்கும் நிலை ஏற்படும் - த.தே.கூ.



19 ஆவது அதிகாரத்தை இல்லாதொழிக்க முயற்சிகளை முன்னெடுத்தால் ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் பிரச்சினைகள் வெடிக்கும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ 19 ஆவது திருத்தத்தை இல்லாதொழிக்க வேண்டும் என்றுகூறி, அதனை செயற்படுத்துவாராக இருந்தால் பிரதமரின் அதிகாரங்கள் குறைக்கப்படும். அதற்கு தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உடன்படுவாரா என்பதில் சந்தேகங்கள் உள்ளன.

ஏனெனில் ஏற்கனவே மட்டு மீறிய அதிகாரங்களுடன் ஜனாதிபதியாகப் பதவி வகித்த அவர், அதிகாரங்களற்ற பொம்மை பிரதமராக இருப்பதற்கு விரும்பமாட்டார்.

எனவே 19 ஐ ஒழிப்பதற்கான முயற்சியில் அவர்களுக்குள்ளேயே பிரச்சினைகள் வெடிப்பதற்கான வாய்ப்புக்கள் உண்டு என்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

புதிய ஜனாதிபதியின் செயற்பாடுகள், எதிர்க்கட்சித் தலைவர் விவகாரம், தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு, அரசியலமைப்பின் 19 ஆவது திருத்த சர்ச்சை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைத் தீர்மானம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

அத்துடன் எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாஸ நியமிக்கப்பட்டிருக்கின்றார். எனவே எதிரணியிலுள்ள கூட்டமைப்பும் அவருடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.