தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரிகள் ஆலையடிவேம்பு முகாமை பார்வையிட்டனர்



(வி.சுகிர்தகுமார்) 
அம்பாரை மாவட்டத்தில் வெள்ள அனர்த்தம் காரணமாக இதுவரை 32 குடும்பங்களை சேர்ந்த 96 நபர்கள் இடம்பெயர்ந்துள்ள நிலையில்; 7147 குடும்பங்களை சேர்ந்த 25027 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் சம்மாந்துறை பிரதேசத்தில் ஒரு மரணம் ஏற்பட்டுள்ளதெனவும் இரு வீடுகள் முழுமையாகவும் 127 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதெனவும் 8 சிறுதொழில் முயற்சிகள் சேதமடைந்துள்ளதெனவும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் தெரிவித்தார்.

இந்நிலையில் வெள்ளம் காரணமாக வெகுவாக பாதிக்கப்பட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பிரிவுகளில் இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் கே.லவநாதன் தெரிவித்தார்.

32 குடும்பங்களை சேர்ந்த 96 பொது மக்களே இவ்வாறு இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன் 1120 குடும்பங்களை சேர்ந்த 3920 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.

இவர்களுக்கான சமைத்த உணவு வழங்கப்படுவதுடன் ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய பணிமனையின் வைத்தியர்கள் மூலம் மருந்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினர்.
இதே நேரம் ஆலயங்கள் பாடசாலைகள் வீதிகள் குடியிருப்புக்கள் என பல்வேறு பகுதிகளும் தொடர்ந்தும் வெள்ளத்தினால் சூழப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களதும் பொது மக்களினதும் அன்றாட நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதுடன் மீனவர்களும் தொழிலின்றி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலை தொடர்பில் ஆராய்வதற்காக இன்று வருகை தந்த தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் அதிகாரி ஜானக ஹந்துவாபெத்த உள்ளிட்ட அதிகாரிகள் ஆலையடிவேம்பில் அமைந்துள்ள இடைத்தங்கல் முகாமை பார்வையிட்டதுடன் பாதிக்கப்பட்ட பிரதேசங்களையும் நேரில் பார்வையிட்டனர்.

இதன்போது அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.எம்.றியாஸ் உள்ளிட்ட ஆலையடிவேம்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்களும்; இணைந்து இருந்தனர்.