என்னை யாராலும் அழிக்க முடியாது ! சர்ச்சைக்குரிய சாமியார் நித்தியானந்தா



சர்ச்சைக்குரிய சாமியார் நித்யானந்தா மீது பாலியல் புகார், குழந்தை கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனால் குஜராத் பொலிஸார் அவரை தேடி வருகின்றனர்.

நித்யானந்தாவுக்கு புளூ கார்னர் நோட்டீசு அளிக்க குஜராத் மாநில பொலிஸார் முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக குஜராத் மாநில குற்றப்பிரிவு பொலிஸுக்கு அகமதாபாத் நகர பொலிஸ் அதிகாரிகள் கடிதம் எழுதி உள்ளனர்.

அந்த கடிதத்தில் அவர்கள் கூறி இருப்பதாவது, பெண்களை கடத்துதல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்ரவதை செய்வது போன்ற குற்றங்களுக்காக நித்யானந்தாவை தேடி வருகிறோம். அவருடைய இருப்பிடம் தெரியவில்லை.

எனவே அவரை கண்டுபிடிக்க புளூகார்னர் நோட்டீஸ் அளிக்க சர்வதேச புலனாய்வு அமைப்பான இண்டர்போலிடம் கடிதம் அனுப்பி அனுமதி பெற்றுத்தருமாறு கேட்டுக்கொள்கிறோம் என அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

ஈக்வடார் நாடு அருகே தனித்தீவை நித்யானந்தா விலைக்கு வாங்கி அதற்கு கைலாசநாடு என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை ஈக்வடார் நாடு மறுத்தது. நித்யானந்தா தற்போது ஹைதி தீவில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அவரை பிடிக்க வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களுக்கும் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது.

கடந்த 2010-ம் ஆண்டு பெங்களூருவில் பெண் ஒருவரை பலாத்காரம் செய்த வழக்கில் இமாச்சல பிரதேசத்தில் வைத்து நித்யானந்தாவை பொலிஸார் கைது செய்தனர். இதனால் அவர் அங்கு பதுங்கிக் கொண்டு வீடியோவை வெளியிட்டு வருவதாக பொலிஸார் கருதுகிறார்கள்.

இதனால் அவரை கண்டுபிடிக்க தனிப்படை பொலிஸார் அங்கு விரைந்துள்ளனர்.

இப்படி பல்வேறு சர்ச்சைகள் வெளியாகி வந்தாலும் கடந்த 22 ஆம் திகதி முதல் புதுப்புது வீடியோக்களை நித்யானந்தா வெளியிட்டு வருகிறார்.

கடைசியாக அவர் வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசி இருப்பதாவது:-

உண்மையை தெரிவிப்பதன் மூலமாக நான் என்னுடைய வலிமையை வெளிப்படுத்துவேன், இப்போது என்னை யாரும் தொடவும் முடியாது, அழிக்கவும் முடியாது. நான் உங்களிடம் உண்மையை சொல்கிறேன். நான் தான் பரமசிவன், சீடர்கள் என்னுடன் இருப்பதால் நீங்கள் உங்களுடைய நேர்மை, விசுவாசத்தை என்னிடம் காண்பித்தீர்கள். உங்களுக்கு மரணமே இல்லை என அவர் பேசி உள்ளார்.

நித்யானந்தா மீது பெண்கள் பாலியல் புகார் கூறி வந்த நிலையில் தற்போது தமிழகத்தை சேர்ந்த விஜயகுமார் என்ற ஆண் பக்தர் பாலியல் புகார் கூறி உள்ளார்.

இதுகுறித்து அளித்துள்ள பேட்டியில் அவர் கூறி இருப்பதாவது, எனக்கு அவரது பேஸ்-புக் மற்றும் மெசஞ்சர் மூலம் பாலியல் தொல்லை கொடுத்தார். அதில் என்னை ஷோசியல் மீடியா பிரிவின் தலைவராக்குகிறேன், நீ எனக்கு வேண்டும், நீ சன்னியாசியாக மாறினால் உன் வாழ்வில் நிறைய மாற்றம் ஏற்படும், நான் உன்னை காதலிக்கிறேன் என்று அடிக்கடி தகவல் அனுப்பினார்.

இதுசம்பந்தமாக நித்யானந்தா மீது விரைவில் ஆதாரத்துடன் பொலிஸில் புகார் செய்வேன் என அவர் கூறினார்.