வெள்ள அனர்த்த கடமைகளின் நிமித்தம் ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து



வெள்ள அனர்த்த கடமைகளின் நிமித்தம் மட்டக்களப்பு மாநகரசபையின் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து...(மாநகரசபை அமர்வில் முதல்வர் தி.சரவணபவன்)


வெள்ள அனர்த்த நிலமைகளில் மாநகர சபையின் அபாயக் குறைப்பு மற்றும் முன் ஆயத்த குழு எந்நேரமும் கடமையில் இருக்க வேண்டும் என்றும் மாநகர சபையில் கடமையாற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, அனைவரும் அனர்த்த அபாயக் குறைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் அறிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாநகர சபையின் 27 ஆவது சபை அமர்வானது நேற்று வியாழக்கிழமை மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தலைமையில் இடம்பெற்றது. இவ் அமர்வில் பிரதி முதல்வர் க.சத்தியாசீலன், ஆணையாளர் கா.சித்திரவேல், மாநகர சபையின் உறுப்பினர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

குறித்த அமர்வில் நிதிக்குழு உள்ளிட்ட குழுக்களின் சிபாரிசுகள், மாதாந்த வரவு செலவு அறிக்கை தொடர்பான விடயங்கள் மற்றும் மாதாந்த கொடுப்பனவு உட்பட கொள்வனவு விடயங்கள் தொடர்பான பல்வேறு விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன் அதற்கான அனுமதிகளும் சபையில் வழங்கப்பட்டன.

அமர்வின் விசேட அம்சமாக தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கடும் மழை அடைமழையாக வலுவடைத்துள்ளதன் காரணத்தினால் வெள்ள நீரினை துரிதமாக வெளியேற்றும் வகையில் பல்வேறு ஆலோசனைகளும் உறுப்பினர்களால் சபையில் முன்வைக்கப்பட்டன.

குறிப்பாக வெள்ள நீரானது வடிந்தோட முடியாத வகையில் தோணாக்களையும், வடிகாண்களையும் பலர் அடைத்து வைத்துள்ளமையால் வெள்ள நீரானது வடிந்தோட முடியாத நிலை காணப்படுவதாக உறுப்பினர்களால் சுட்டிக்காட்டப்பட்டதுடன் அவ்வாறு சட்ட விரோதமாகவும், அனுமதியற்ற முறையிலும் அடைத்து வைத்து உரிமை கோரும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் அறிவித்தார்.

அத்துடன் இவ் அனர்த்த நிலமைகளில் மாநகர சபையின் அபாயக் குறைப்பு மற்றும் முன் ஆயத்த குழுவானது எந்நேரமும் கடமையில் இருக்க வேண்டும் என்றும் இதற்கு மேலதிகமாக மாநகர சபையில் கடமையாற்றும் பதவிநிலை உத்தியோகத்தர்கள் உட்பட ஊழியர்கள் அனைவரினதும் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டு, அனைத்து உத்தியோகத்தர்களும் அனர்த்த அபாயக் குறைப்பு பணிகளில் ஈடுபட வேண்டும் என்றும் இது தொடர்பான நிர்வாக நடைமுறைகளை ஆணையாளர் மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அத்துடன் 10 உறுப்பினர்களின் கையொப்பத்துடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் உறுப்பினர் கு.காந்தராஜாவினால் கொண்டு வரப்பட்ட மாநகர முதல்வரின் நிதி அதிகாரங்களை மீள் பரிசீலனை செய்வதற்கான பிரேரணையானது 15 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக 25 வாக்குகளும் எதிராக 10 வாக்குகளும் அளிக்கப்பட்டதுடன், இரண்டு வாக்குகள் நடுநிலையாகவும் இடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.