தமிழ் மக்களின் உரிமைகளுக்காக ஐ.தே.மு.வுடன் இணையத் தயார் – சுமந்திரன்


எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர் தேவைப்பட்டால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை பெற்றுக் கொள்வதற்காக ஐக்கிய தேசிய முன்னணியில் இணைந்துகொள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பாக ஊர்காவற்துறையில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுமந்திரன் பேசியதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதே வேளை அடுத்த பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக இடங்களைப் பெறும் என்றும் சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழர்களின் உரிமைகள் அதிகாரப் பகிர்வுக்கான ஒரு புதிய முறையை கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்குவது குறித்து தீர்மானிக்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

மேலும் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் விடயத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தயக்கம் காட்டாது என்றும் சுமந்திரன் வலியுறுத்தினார்.