16 வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி கர்ப்பமாக்கிய சந்தேக நபர் விளக்கமறியலில்!


(எப்.முபாரக்)
திருகோணமலை மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பதினாறு வயதுடைய சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தி மூன்று மாத கர்ப்பமாக்கிய சந்தேக நபரை இம்மாதம் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் இன்று(20) உத்தரவிட்டார்.

பாரதிபுரம்,கிளிவெட்டி,மூதூர் பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:

சந்தேக நபரான இளைஞன் பதினாறு வயதுடைய சிறுமியை நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளதோடு,சிறுமியை தனியான இடங்களுக்கும் அழைத்துச் சென்று தங்க வைத்துள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரின் வீட்டுக்கு அருகாமையில் சிறுமியின் வீடு அமைந்துள்ளதாகவும் சிறுமியை திருமணம் முடிப்பதாக கூறியே இளைஞன் காதலித்து வந்துள்ளதாகவும் இரண்டு மாத காலமாக சிறுமியோடு தொடர்பில்லாது தலை மறைவாக இருந்த நிலையிலே சிறுமின் பெற்றோர் மூதூர் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து மூதூர் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வேண்டி மூதூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.