காரைதீவு – பழைய பாலத்துடன் புதிய கார்ப்பட் வீதியா? மக்கள் விசனம்: அதிகாரிகள் கவனிப்பார்களா?

(பாறுக் ஷிஹான்)
காரைதீவு விபுலாநந்த மத்திய கல்லூரி வீதியிலுள்ள மிகவும் பழைய பாலம் இருக்கத்தக்கதாக புதிதாக கார்ப்பட் வீதி அமைக்கப்பட்டு வருகின்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கி நிதியுதவியுடன் ‘ஜ’ திட்டத்தின் கீழ் இப்பழைய பாலத்தை புதிதாக திருத்தியமைப்பதற்கு திட்டம் இல்லையெனக் கூறப்படுகிறது. 

அதுமட்டுமல்லாமல் விபுலாநந்த மத்தியகல்லுரிக்கு முன்னாலுள்ள வீதிக்கு முன்பதாக வடிகான் திட்டமில்லையென்றும் கூறப்பட்டுள்ளது.

இவ் வீதியை தினமும் பாடசாலை மாணவர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்திவருகின்றனர். கடலுக்குச்செல்வோரும் இவ்வீதியால்தான் பயணிக்கின்றனர்.

இத்திட்டத்திற்கு பொறுப்பான கிழக்கு மாகாணப்பணிப்பாளர் பொறியியலாளர்கே.பத்மராஜா இதுவிடயத்தில் கவனமெடுக்கவேண்டு மென காரைதீவு ஊர்ப்பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
குறிப்பாக புதிய பாலம் கட்டாயம் அமைக்கப்படவேண்டும் என்பது வலியுறுத்திகூறப்பட்டுள்ளது.

சிறுகூட்டமொன்று ஒருசில மாதங்களுக்கு முன்பு நடாத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அதற்கு காரைதீவு தவிசாளரோ ஏனைய முக்கிய பிரமுகர்களோ அழைக்கப்படவில்லை.எனவே மக்களது பூரண கருத்தறியப்படாமல் இப்பாரிய வீதி அபிவிருத்தித்திட்டம் முன்னெடுக்கப்பட்டது முறையா? என மக்கள் வினவுகின்றனர்.

குறித்த கரைச்சைப்பாலம் எப்போதும் விழலாம் என்ற நிலையிலிருப்பதை கடந்தகாலங்களில் பல தடவைகள் வீதி அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

காரைதீவு பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டங்களிலும் இப்பாலம் புனரமைக்கப்படவேண்டியதன் முக்கியத்துவம் பற்றிப் பலதடவைகள் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.முன்னாள் அமைச்சர் உதுமாலெவ்வை நேரடியாகவந்து பார்வையிட்டுச்சென்றதும் குறிப்பிடத்தக்கது.

மிகவும் பதிவாக இருக்கின்ற இப்பாலமட்டத்தில் தற்போது ஆற்றுவாழைகள் நிரம்பி வெளியேவரவுள்ள நிலையிலுள்ளது. எனவே 2 அடிக்காவது உயர்த்தி முறையாக முழுமையான வீதி அபிவிருத்தியை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்த்துள்ளனர்.

இந்த நிலையில் அகற்றப்படவேண்டிய இப்பழைய பாலத்தை அப்படியேவைத்து கார்ப்பட் வீதியை அமைப்பது அரசுக்கு மேலதிக செலவீனத்தை ஏற்படுத்தும் சதியாகவே பார்கப்படுகிறது.

வீதி அமைக்கப்பட்டபிற்பாடு பின்னர் பாலம் அமைக்கலாமா? இது இரட்டைவேலை என்பதுடன் மேலதிக செலவீனத்தையும் அசௌகரியத்தையும் ஏற்படுத்தும்.