மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்திற்கான புதிய கட்டிடம் திறப்பு !

(சிவம்) (மட்டக்களப்பு சிஹாறா லத்தீப்) (லியோன்)ரூபாய் 2 கோடி செலவில் மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்திற்கான கீழ்த்தளப் புதிய கட்டிடம் மட்டக்களப்பு – திருமலை வீதி பிள்ளையாரடியில் இன்று (15) திறந்து வைக்கப்பட்டது.
அதிதிகள் புரவிப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து அழைத்து வரப்பட்டதும் கட்டிட வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலைக்கு சிவனேசச் செல்வன் சாம்பசிவம் சிவாச்சாரியாருடன் வர்த்தகர் யுனைட்டட் செல்வராஜாவும் மாலை அணிவித்தனர்.

கட்டிடத்திற்கான நிதியுதவியை வழங்கிய கொடையாளர்களின் பெயர்ப் படிகத்தை வர்த்தக சங்கததின் முன்னாள் தலைவர் எஸ்.அமிர்தலிங்கம், விபுலானந்தரின் உருவப் படத்தை பேராசிரியர் மற்றும் தனிநாயகம் அடிகளாரின் உருவப் படத்தை அருட்தந்தை நவரட்ணம் நவாஜியும் திறந்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மண்டபத்தைத் திறந்து தமிழ் சங்கத்தின் தலைவர் சைவப்புரவலர் வி.ரஞ்சிதமூர்த்தி மற்றும் கட்டிடக் குழுத்தலைவர் தேசபந்து எம்.செல்வராஜா முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா மற்றும் மாநகர முதல்வர் தி.சரவணபவன் ஆகியோர் திறந்து வைத்தனர்.

தமிழ் மொழி வாழ்த்தை அக்சயா தங்கராஜா பாடியதோடு ,வரவேற்பு நடனத்தை மட்டக்களப்பு ரிதம் இளைஞர் கலைக்குழுவினர் வழங்கினர். நடனத்தை சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக மாணவர்கள் வழங்கினர்.

இந்நிகழ்வில் கொடையாளிகள் கௌரவிக்கப்பட்டதோடு சிறப்பு மலரும் வெளியிடப்பட்டது.