பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு லண்டன் கனக துர்க்கையம்மன் ஆலயத்தினால் உதவித் திட்டங்கள் வழங்கி வைப்பு !


(NR)
பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான மாதாந்த கல்வி உதவித் திட்டங்களை வழங்கும் நிகழ்வானது இன்றைய தினம் (16) புதுக்குடியிருப்பு விவேகானந்தா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் வெல்லாவெளிக் கோட்டக்கல்வி பணிப்பாளர் அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாணத்திலிருந்து பல்கலைக் கழகத்திற்குத் தெரிவு செய்யப்பட்டும் வறுமை காரணமாக தமது கல்வியைத் தொடர முடியாத 50 மாணவர்களுக்கு லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலய அறங்காவலர் சபையினரால் சங்காரவேல் பவுண்டேசனின் துணையுடன் மாதாந்த உதவிக் கொடுப்பனவுகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன் மற்றும் சீ.யோகேஸ்வரன் ஆகியோரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹரிகரராஜ், லண்டன் ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலய அறங்காவலர் சபையின் முன்னாள் தலைவர் துரைரெட்ணசிங்கம் உட்பட சங்காரவேல் பவுண்டேசனின் உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.