அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கு விநியோகிக்க நாளை முதல் அனுமதி !

அத்தியாவசிய நுகர்வு பொருட்களை வீடுகளுக்கே கொண்டுசென்று விற்பனை செய்வதற்கு மொத்த வியாபாரிகளுக்கு அரசாங்கம் ஆலோசனை வழங்கியுள்ளது.



சதொச, கீல்ஸ், லாஃப்ஸ், ஆர்பிகோ, ஃபுட் சிட்டி, அரலிய, நிபுன மற்றும் பிற மொத்த நிறுவனங்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

அத்தியாவசிய நுகர்வோர் பொருட்களை வீடுகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை முறையாக மேற்கொள்வதற்காக பசில் ராஜபக்சவின் தலைமையில் செயற்பாட்டு படையணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.



உணவு பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள், மருந்துகள், எரிபொருள் மற்றும் ஏனைய சேவைகளை தடையின்றி மற்றும் தொடர்ச்சியாக பொதுமக்களுக்கு பெற்றுக்கொள்ளும் திட்டம் நாளை முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

லொறி, வேன், முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்கள் பொருட்களை விநியோகிப்பதற்காக பயன்படுத்தப்பட உள்ளன.

குறித்த விநியோக வாகனங்களுக்கு ஊரடங்கு சட்ட காலப்பகுதியில் வீதியில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.