சம்மாந்துறையில் பழைய கருவாடுகள், அதிக விலையில் மரக்கறிகள் விற்பனை; வியாபாரிகள் மீது சட்ட நடவடிக்கை


(பாறுக் ஷிஹான்)
பழைய கருவாட்டு வகைகளை நூதனமாக விற்ற ஒருவரை சம்மாந்துறை பொது சுகாதார பரிசோதகர்கள் இராணுவத்தின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு கருவாடுகளை மீட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அமுல்படுத்தப்பட்ட ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் திங்கட்கிழமை(6) இச்சம்பவம் இடம்பெற்றது.

சம்மாந்துறை வர்த்த சங்க பிரதிநிதிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் சம்மாந்துறை இராணுவத்தினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது வீதியோரத்தில் பழுதடைந்த கருவாடு விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவர் மற்றும் அதிக விலையில் விற்பனை செய்த மரக்கறி வியாபாரிகள் ஆகியோர் அடையாளம் காணப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்பட்டனர்.

மேலும் விலைப்பட்டியல் பொருத்தப்படாத கடைகள் பிரத்தியேகமான மொத்த விற்பனை நிலையங்களில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையிலான சுற்றிவளைப்புகள் அவ்விடத்தில் மேற்கொள்ளப்பட்டன.அத்துடன் பொது மக்களுக்கு கட்டுப்பாட்டு விலைகளில் அததியாவசியப் பொருள்கள் கிடைப்பதனை உறுதிப்படுத்தும் செயற்பாடுகளிலும் பொருட்களின் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுத்ததோடு காட்சிப்படுத்தாத உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதன்போது வருமான வரி உத்தியோகத்தர்கள் இராணுவத்தினரும் இவ் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினர்.