நாளை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அக்கரைப்பற்று பொதுச்சந்தை மூடப்பட்டிருக்கும்

(வி.சுகிர்தகுமார்) 
நாளை காலை ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அக்கரைப்பற்று பொதுச்சந்தை மூடப்பட்டிருக்கும் என அக்கரைப்பற்று பொலிசார் ஒலிபெருக்கி மூலம் மக்களுக்கு அறிவித்தல் வழங்கி வருகின்றனர்.

பொதுச்சந்தைக்கு பதிலாக அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானம், அக்கரைப்பற்று நீர்ப்பூங்கா , அதாவுல்லா விளையாட்டு மைதானம், அட்டாளைச்சேனை பாமங்காய் வீதி, சாகாம வீதி ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக சந்தைகளில் பொருட்களை கொள்வனவு செய்யுமாறும் மக்களை அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மக்களின் அளவுக்கதிகமான ஒன்று கூடலை தவிர்க்கும் முகமாகவே இவ்வேற்பாடு இடம்பெற்றுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆகவே பொதுமக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை குறித்த இடங்களுக்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்.

இதேநேரம் ஊரடங்கு நிலை காரணமாக அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு பிரதேசம் முழுவதும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக்காணப்பட்டது.

ஆயினும் அத்தியாவசிய தேவையின் பொருட்டு ஒரு சில வாகனங்கள், உத்தியோகத்தர்கள், விவசாயிகள், நடமாடியதை அவதானிக்க முடிந்தது.

இருப்பினும் வீதிகளிலே நடமாடியவர்கள் மீது பொலிசார் சோதனை நடவடிக்கையினை மேற்கொண்டதையும் அவதானிக்க முடிந்தது.