சம்மாந்துறையில் சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்களை மறு அறிவித்தல் வரை மூட நடவடிக்கை

(பாறுக் ஷிஹான்)
சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் அதாவது 'சலூன்' கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் என சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் ஏக மனதாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் நாளை திங்கட்கிழமை(6) தளர்த்தப்பட உள்ள நிலையில் சம்மாந்துறை பிராந்தியத்தில் எவ்வாறான நடைமுறைகளை வியாபாரிகள் பின்பற்ற வேண்டும் என்ற கலந்துரையாடல் ஞாயிற்றுக்கிழமை(5) முற்பகல் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடல் சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் முஹம்மட் நௌஷாட், சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எம் ஆசிக், சம்மாந்துறை வைத்திய சாலை அத்தியாட்சகர் அஸாத் ஹனீபா,சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எஸ்.ரீ.எம்.கபீர்,பிராந்திய இராணுவ முகாம் பொறுப்பதிகாரி கப்டன் நவரட்ண , பிரதேச வர்த்தக சம்மேளன தலைவர், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், சுகாதார பரிசோதகர்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன் போது குறித்த கலந்துரையாடலில் அனைத்து கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்படும் போது உரிய சுகாதார நடைமுறைகள் பின்பற்றி வர்த்தகர்கள் செயற்பட வேண்டும் என தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.எனினும் ஏனைய ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் அதாவது 'சலூன்' கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும் என அங்கு தீர்மானம் எடுக்கப்பட்டன.

அத்துடன் இவ்வாறு திறக்கப்படும் வர்த்தக நிலையங்களுக்கு வருகைதரும் நுகர்வோருக்கு இடையில் சமூக இடைவெளி பேணப்பட வேண்டும், கை கழுவுதல், முககவசம் அணிந்து கொண்டு வர வேண்டும், இவ் உத்தரவை மீறுபவர்கள் மீது வழக்கு தாக்கல் செய்யப்படும் என தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் சம்மாந்துறை ஹிஜ்றா சந்தியில் இருந்து விளினையடி சந்தி வரையுமான பிரதான வீதியின் இருமங்கிலும் எவ்வித காரணத்தையும் கொண்டும் நடைபாதை வியாபாரிகள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதோடு பிரதேசங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடும் ஒவ்வொரு நடைபாதை வியாபாரிகளும் இடையில் குறைந்து 50 மீட்டர் இடைவெளியினை பேண வேண்டும் மேலும் இதனை மீறுபவர்களுக்கு எதிராக பொலிஸாரினாலும் இராணுவத்தினாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

சம்மாந்துறை பொதுச்சந்தையின் பலசரக்கு கடைகள் மற்றும் இறைச்சிக்கடைகள் என்பன தவிர்ந்த ஏனைய சகல கடைகளும் மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

சகல ஹோட்டல்கள் மற்றும் சிகை அலங்கார நிலையங்கள் அதாவது 'சலூன்' கடைகள் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருத்தல் வேண்டும்.

சகல சில்லறை மற்றும் மொத்த வியாபார நிலையங்களுக்கு முன்பாக கட்டாயம் கை கழுவுவதற்கான ஏற்பாடுகள் செய்யபட்டிருப்பதோடு வாடிக்கையாளர்களுக்கு இடையிலான 01 மீற்றர் சமூக இடைவெளி பேணுவதற்காக வழி நடத்து ஆளனி ஏற்பாட்டினை உரிய வியாபார நிலையத்தின் உரிமையாளரினாலேயே செய்யபட்டு இருக்க வேண்டும்.அவ்வாறு இல்லாத கடைகளுக்கு எதிராக சுகாதார பரிசோதகரினாலும் பொலிஸாரினாலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மக்களின் அத்தியவசியத் தேவைகளை கருத்திற்கொண்டு நடமாடும் வியாபாரத்திற்காக அனுமதியளிக்கப்பட்ட வியாபாரிகள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட பிரதேசங்களில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடத் தவறும் பட்சத்தில் வியாபரத்திற்காக வழங்கப்பட்ட வெளிச்செல்லும் அனுமதிப் பத்திரம் இரத்துச் செய்யப்படும் என்பதோடு விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத சகல வியாபாரிகளுக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் அத்தியாவசிய தேவைகளுக்காக அன்றி எவரும் வெளியிடங்களுக்கு வர வேண்டாம் என்பதோடு பொருட்களை கொள்வனவு செய்யும் நோக்கில் வரும் பொதுமக்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறு பிள்ளைகளை அழைத்து வர வேணாம் என்று அறிவுறுத்தப்பட்டனர்.

முடியுமான அளவு வாகனங்களை தவிர்த்து நடையில் வருவதோடு பிரதான பாதைகளில் வாகனங்கள் தரிக்கச் செய்து வீதி நெரிசலை ஏற்படுத்தாத வண்ணம் நடந்து கொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுள்ளனர்.

இது தவிர அம்பாரை மாவட்டத்தில் பாவனையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் நிர்ணயவிலை தீர்மானம் ஏற்கனவே எடுக்கப்பட்டுள்ள நிலையில் இந்நிர்ணய விலையை மீறி விலைக்கட்டுப்பாடு இன்றி விற்பனை செய்யும் வர்த்க நிலையங்களை சுற்றி வளைப்புகளை மேற்கொண்டு சட்ட நடவடிக்கை எடுப்பது என பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் அம்பாரை மாவட்ட அலுவலக புலனாய்வு உத்தியோகத்தர்கள் குறிப்பிட்டனர்.