மட்டக்களப்பில் கடும் வெயிலில் நீண்ட வரிசை - பொருட்களை கொள்வனவு செய்வதில் மக்கள் அவதி

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கொரொனா வைரஸ் காரணமாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று (6) கிழக்கு மாகாணத்தில் தளர்த்தப்பட்டதன் பின்னர் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் பொருட்களை கொள்வனவு செய்ய அதிகம் ஆர்வம் கொண்டதை காண முடிந்தது.

அந்தவகையில், கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மக்கள் நலன்கருதி இன்று நான்கு பிரதான இடங்களில் சந்தைத் தொகுதி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இன்றைய நாள் குறித்த பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டதோடு, வங்கி தேவைகள் மற்றும் பொருள் கொள்வனவுகளுக்காக பொதுமக்கள் கடும் வெயிலில் நீண்ட வரிசையில் அவதியுடன் நின்றதை அவதானிக்க முடிந்தது.

குறித்த பகுதியில் மக்களை கட்டுப்படுத்தி மக்கள் தங்களுடைய தேவைகளை இலகுவாகப் பெற்றுக் கொள்ள பாதுகாப்புப் படையினர் பெரும் ஒத்துழைப்புக்களை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.