குளிர்த்தி சடங்குகள் நடக்கும்: பக்தர்களுக்கு அனுமதியில்லை ! 29ஆம் திகதி இறுதி முடிவு என்கிறார் பிரதேச செயலர் கஜேந்திரன்.


(காரைதீவு  நிருபர் சகா)
வரலாற்று பிரசித்தி பெற்ற தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மனாலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்குகள் நடைபெறும். ஆனால் கொரோனா தடுப்பு சுகாதாரசட்டவிதிப்படி பக்தர்கள் ஒன்றுகூட அனுமதியில்லை.

இவ்வாறு திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் இன்று(22) தெரிவித்தார்.

இன்று(22) வெள்ளிக்கிழமை திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அம்மன் குளிர்த்தி தொடர்பான 2ஆம் கட்டகூட்டமொன்று நடைபெற்றது. கூட்டத்தில் பிரதேசசுகாதாரவைத்திய அதிகாரி டாக்டர் மென்டிஸ் அப்பு பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஆலயநிருவாகசபையினர் கலந்துகொண்டனர்.

கூட்ட முடிவின் படி சடங்குகளை கப்புகனார் வழமைபோல் செய்வதென்றும் பக்தர்கள் கலந்துகொள்ள முடியாது என்று தெரிவித்த அவர் எது எப்பிடியிருப்பினும் எதிர்வரும் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை 3ஆம் கட்ட இறுதிக்கூட்டத்தை நடாத்தி அப்போதைய நாட்டின் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இறுதி முடிவெடுக்கப்படும் என்றார்.

குளிர்த்தி தொடர்பான முதலாம் கட்ட விரிவான கலந்துரையாடல் அண்மையில் நடைபெற்றமை தெரிந்ததே.

வரலாற்று பிரசித்திபெற்ற தம்பிலுவில்  கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி வைபவம் எதிர்வரும் ஜூன் 2ஆம் திகதி கதவு திறத்தலுடன் ஆரம்பமாகி 8ஆம் திகதி அதிகாலை திருக்குளிர்த்தி பாடலுடன் நிறைவடையும். 7ஆம் திகதி அம்பாள் ஊர்வலம் இடம்பெறும்.8ஆம் திகதி பொங்கலுடன் குளிர்த்திபாடி நிறைவடையுமென்பது குறிப்பிடத்தக்கது.