பாகிஸ்தான் தூதுவர் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு

(கதிரவன் திருகோணமலை)
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் முஹமட் சாட் கட்டாக் நேற்று வியாழக்கிழமை மாலை கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களை திருகோணமலையில் அமைந்துள்ள கிழக்கு மாகாண் ஆளுனர் செயலகத்தில் (28) சந்தித்தார்.

சந்திப்பின் இறுதியில் செய்தியாளர்களுக்கு தமது விஜயம் சம்பந்தமாக உயர்ஸ்தானிகர் அவர்கள் கருத்து தெரிவித்தார்.

கொரோனா பேரிடர் இலங்கையை தாக்குவதற்கு முன்னர் தாம் இலங்கைக்கு வந்ததாகவும் அதன் பின்னர் குறித்த பேரிடர் காரணமாக தமக்கு பாகிஸ்தானிற்கு திரும்பவும் செல்லமுடியாதனிலை ஏற்பட்டதாகவும் தெரிவித்த உயர்ஸ்தானிகர், தாம் இலங்கையில் இருந்த காலப்பகுதியில் தனது கதையை ஒரு புத்தகமாக எழுத ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இரு நாடுகளுக்கு இடையில் நீண்டகாலமாக நல்லதோர் புரிந்துனர்வு இடம்பெற்றுவரும் இந்நிலையில் தமது கிழக்கு மாகாணத்திற்கான விஜயத்தின் ஊடாக மாகாணத்தில் உள்ள அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் தாம் உதவுவதற்கு தயாராக இருப்பதாக அவர் குறிப்பிட்டார்

மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்
கிழக்கு மாகாணத்தின் வர்த்தக நடவடிக்கைகளை கட்டியெழுப்புவது தொடர்பாகவும், கல்வி சம்பந்தமான புலமைப்பரிசில் திட்டங்கள் சம்பந்தமாகவும், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறையினை மேம்படுத்துவது தொடர்பிலும் குறிப்பாக சமயம் சார்ந்த சுற்றுலாத்துறையின் விருத்தி தொடர்பாகவும் இவ் சந்திப்பின்போது தாம் கலந்துரையாடியதாக தெரிவித்தார்.