மட்டக்களப்பில் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் திறந்துவைப்பு


(லியோன்)
கிழக்கு மாகாணத்திற்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் இன்று  திறந்து வைக்கப்பட்டது .

கிழக்குமாகாணத்திற்கான தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் மட்டக்களப்பு மாவட்டத்தின் திராய்மடு பிரதேசத்தில் கமநல அபிவிருத்தி திணைக்கள ஆணையாளர் நாயகம் டப்ளியு .எம் .எம் . பி . வீரசேகர அதிதியாக கலந்துகொண்டு இன்று திறந்து வைக்கப்பட்டது

இன்று திறந்து வைக்கப்பட்ட தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடம் தொடர்பாக கருத்து தெரிவித்த கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படும் நிர்மாணங்களின் மூலப் பொருட்களான கல், மண், சீமெந்து, கொங்ரீட் போன்றவற்றின் தரம் மற்றும் விவசாய நிலம் உட்பட ஏனைய நிலங்களின் மணலினையும் ஆய்வு செய்து அறிக்கையிடும் நிர்மாண தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடமாக இந்த ஆய்வுகூடம் அமைகின்றது

இத்திட்டத்திற்காக கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 3.5 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இப் புதிய ஆய்வுகூடம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனூடாக கிழக்கு மாகாணத்தில் விவசாய நிலங்களினுடைய மண் பரிசோதனை, மற்றும் ஏனைய மண், கல் தரப்பரிசோதனை, கொங்கரீட் மற்றும் சீமெந்து தரப்பரிசோதனைகள் விசேடமாக விவசாய நிலங்களினது மண்ணின் தரத்தினை பரிசோதனை செய்து அந்நிலத்துக்குப் பொருத்தமாக பயிர்வகையினை செய்கை செய்வதற்குமான ஆலோசனை வழிகாட்டல்களும் இதனூடாகப் பெற்றுக் கொள்ளமுடியும். இது இப்பிராந்திய விவசாயிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் தெரிவித்தார்

இக்கட்டிடமானது இலங்கையில் அமைந்துள்ள தரக்கட்டுப்பாட்டு ஆய்வுகூடங்களில் மொனராகல, வவுனியா ஆகிய பிரதேசங்களுக்கு மேலதிகமாக கிழக்குப் பிராந்தியத்தில் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை மாவட்டங்களுக்காக மட்டக்களப்பில் அமையப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கமநல அபிவிருத்தி திணைக்கள மட்டக்களப்பு மாவட்ட உதவி ஆணையாளர் கே. ஜெகநாத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கமநல அபிவிருத்தி திணைக்கள பிரதி ஆணையாளர் நாயகம் ஏ.எச்.எம்.எல்.அபேரத்ன, நீர் முகாமைத்துவப் பொறியியலாளர் டீ.டீ.பிரபாத் விதாரண, மாவட்ட விவசாயத் திணைக்கள பிரதி விவசாய பணிப்பாளர் வி.பேரின்பராஜா, மட்டக்களப்பு மத்தி வலய உதவி விவசாய பணிப்பாளர் எஸ்.சித்திரவேல் மட்டக்களப்பு மாவட்ட கமநல அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டதுடன் வளாகத்தில் தென்னை மரக்கன்றுகளும் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தது.