கல்வி அமைச்சு சற்றுமுன்னர் வெளியிட்ட அறிவிப்பு


அனைத்து முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் ஒன்றாக அனைத்து பாடசாலைகளும் கடந்த மார்ச் மாதம் 15 ஆம் திகதி மூடப்பட்டன.

இதன் பின்னர் பாடசாலைகளை நான்கு கட்டங்களுக்கு அமைவாக மீண்டும் திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

ஜூன் 29 முதல் ஜூலை 03 வரை ஆசிரியர், அதிபர் பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும் என்றும் ஜூலை 06 ஆம் திகதி தரம் 05, 11, 13 மாணவர்களுக்கும் ஜூலை 20 ஆம் திகதி தரம் 10, 12 மாணவர்களுக்கும் ஜூலை 27 ஆம் திகதி தரம் 03, 04, 06, 07, 08, 09 மாணவர்களுக்கும் கல்வி நடவடிக்கைகள் ஆரமபமாகும் எனவும் முன்னர் அறிவிக்கப்படிருந்தது.

இருப்பினும் முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் குறித்து தீர்மானம் எடுக்கப்படாமல் இருந்தது.

இந்நிலையில் கல்வி அமைச்சு இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து முன்பள்ளிகள் மற்றும் தரம் 1, தரம் 2 மாணவர்களுக்கு எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.